Kids Viral Selfie : இன்றைய கால கட்டத்தில் கையில் ஆண்ட்ராய்டு ஃபோன் வைக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி வைத்திருப்பவர்களில் செல்ஃபி எடுக்காதவர்களை சல்லடை போட்டு சலித்தாலும் கண்டுப்பிடிக்க முடியாது.பொதுவான பயன்பாட்டாளர்களே இதில் அடங்க மாட்டார்கள் எனும் போது, செல்ஃபி பிரியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த செல்ஃபி மோகம் தற்போது 6 மாத குழந்தையைக் கூட விட்டு வைப்பதில்லை.
இந்நிலையில் இது சம்பந்தமான புகைப்படம் இனையதளத்தில் வைரலாகி வருகிறது. செல்ஃபி படத்தில் அப்படி என்ன வைரல்? என மூளையை கசக்காதீர்கள். சின்னசிறு குழந்தைகள் முகம் முழுக்க புன்னகையுடன், மனம் முழுக்க பூரிப்புடன் கையில் ஃபோனே இல்லாமல் எடுத்த செல்ஃபி தான் அது.
Kids Viral Selfie
ஆம்! நான்கு குழந்தைகள் தன்னை சூழ்ந்து நிற்க, தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு செல்ஃபி எடுக்கிறார் ஒரு சிறுவன். இந்தப் படம் தான் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. இதனை எடுத்த இடம் எங்கே, எடுத்தவர் யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை.
நீங்களாக மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் போது தான் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறீர்கள், என்ற வாக்கியம் இங்கே இருக்கும் அனைவருக்கும் பொருந்துகிறது. இந்த செல்ஃபி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக லைக்குகளைப் பெறும் என நம்புகிறேன்’ என்ற பதிவோடு அந்த செருப்பு செல்ஃபி படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி. இதனைத் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் இந்தப் படத்தை சிலாகித்து ஷேரிட்டு வர, அதற்கு திடீரென பிரேக் போட்டார், பாலிவுட்டின் உச்ச நடிகர் அமிதாப் பச்சன்.
அவரது வாதம் இது தான், “மரியாதை மற்றும் மன்னிப்புடன் இதைக் கூறுகிறேன். இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டுள்ள படமாக நினைக்கிறேன். அவனது உருவத்தைவிட, அவன் கையில் வைத்திருக்கும் செருப்பு பெரிதாக இருக்கிறது” என்றார்.
அமிதாப்பின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் பாலிவுட்டின் பிரபல ஃபேஷன் ஃபோட்டோகிராஃபர் அதுல் காஷ்பேகர், “அமித் ஜி, நான் தனித்தனியாக மூன்று போஸ்ட் புரொடக்ஷன் நிறுவனங்களிடம் விசாரித்தேன். இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது இல்லை என்று தான் அனைவரும் சொன்னார்கள். ’பெர்ஸ்பெக்டிவ் டிஸ்டார்ஷன்’ என்ற நிலையில் ஸ்மார்ட்ஃபோன்களைப் போல், செருப்பைப் பயன்படுத்தி அவர்கள் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
.. with due respect and apology .. i feel this is photoshopped .. notice that the hand that holds the chappal is different than the rest of his body in size .. to his other hand by his side !!
— Amitabh Bachchan (@SrBachchan) 3 February 2019
அடுத்த பதிவில் ’கேள்விகளை எழுப்பும் அழகான படம், இந்தக் குழந்தைகளின் தன்னடக்கம் என்னை புன்னகை கொள்ள செய்கிறது. யாருக்காவது இந்த இடத்தையும், குழந்தைகளையும், இதன் ஃபோட்டோகிராஃபரையும் தெரிந்தால் சொல்லுங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.தொடர்ந்து பல நெட்டிசன்கள் குழந்தைகளின் இந்த செருப்பு செல்ஃபியை பகிர்ந்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.