New Update
/
Coimbatore | மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி ஊருக்குள் வர தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள வெள்ளிப்பாளையம் சென்னாமலை காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஒன்றை மர்ம விலங்கு அடித்து கொன்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகாரளித்தனர்.
இதனையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை வைத்து மர்ம விலங்கு குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு அந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை மர்ம விலங்கு தாக்கிககொன்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது.
எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.