மகாராஷ்டிராவில் வயல்வெளியில் புலியிடம் தனியாக சிக்கிகொண்ட நபர் ஒருவர் சாமர்த்தியமாக உயிர்தப்பிய சம்பத்தின் பதற வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
எல்லாம் நன்மைக்கே என்று ஒரு கதையைப் பலரும் படித்திருப்போம்... கேட்டிருப்போம். அந்த கதையில் மன்னனின் கைகளில் காயம் ஏற்பட்டுவிட அமைச்சர் எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார். கோபம் அடைந்த மன்னன் எனது கைகளில் காயம் அடைந்தது நன்மைக்கா என்று கேட்டு அமைச்சரை சிறையில் அடைத்துவிட்டு பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட செல்வான். காட்டில் வழி தவறி தனியாக சென்ற மன்னன் கலைப்பாக இருக்கும்போது அவர் மீது ஒரு புலி ஒன்று தீடிரென பாய்கிறது. அப்போது மன்னம் மூர்ச்சையாகி விழுந்துவிடுவான். மன்னனின் கைகளில் ரத்தத்தையும் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதைப் பார்த்த புலி இறந்த விலங்குகளை உண்ணாது என்பதால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடும். ஒரளவும் இந்தக் கதையைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் புலி ஒன்று காட்டில் இருந்து வெளியே வந்து வயல்வெளிக்குள் புகுந்தது. இதனை அறியாமல் வயலுக்குச் சென்ற நபரை அங்கே மறைந்திருந்த புலி அவரைப் பாய்ந்து தாக்க சுற்றி வளைத்தது.
இதனால், புலி தாக்க வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், மிகவும் சாமர்த்தியமாக தரையோடு தரையாக அப்படியே படுத்துவிட்டார். அவர் அசைவற்று மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் புலி அவர் அருகே சென்று தாக்குவதற்கு காத்துக்கொண்டிருந்தது.
இதனிடையே, அசைவற்றுக் கிடக்கும் அந்த நபரை புலி மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு பெரும் கூச்சலிட்டுக்கொண்டு அருகே வந்தனர். சிலர் அருகில் உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்து சத்தம் போட்டனர். இதனால், அச்சம் அடைந்த அந்த புலி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து விரைவாக ஓடி மறைந்தது. அந்த புலி போனபின், அந்த நபர் மிகவும் சாதாரணமாக எழுந்து நடந்து செல்கிறார். இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர் அங்கே மரத்தின் மீது ஏறி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துளார்.
புலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர் எப்படி சாமர்த்தியமாக உயிர் தப்பினார் என்ற இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.