கோவை மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள அறிவொளி நகர், வெள்ளிப் பாளையம், மோத்தேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்கள் அடிக்கடி காணாமல் போயின.
இந்நிலையில் கடந்த அக்.21 ஆம் தேதி அறிவொளி நகர் பகுதியில் ருக்குமணி அம்மாள் (60) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு இருந்த நாயை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.
இதேபோல் கடந்த நவ.8 ஆம் தேதி மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள மோத்தேபாளையம் பகுதியில் மோகன்குமார் (50) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று சென்னாமலை கரடு பகுதியில் இருந்து வெளியேறி சப்தமில்லாமல் தூக்கிக் கொண்டு வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்..!#covai #cheetah pic.twitter.com/ocmBS2UHGe
— Indian Express Tamil (@IeTamil) January 5, 2025
இதேபோல் அதே மோத்தேபாளையம் பகுதியில் கடந்த டிச.10 ஆம் தேதி சக்தி (36) என்பவரது வீட்டின் முன்பு இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை பதுங்கி வந்து தூக்கிச் சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன.3 ஆம் தேதி) அதிகாலை 12 மணியளவில் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்துச் சாலைக்கு சிறுத்தை ஒன்று வந்து உள்ளது.
அந்த சிறுத்தை அங்கும் இங்கும் உலாவி விட்டு அங்கு இருந்த நாய் கூண்டு இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்துள்ளது. திடீரென நுழைந்த சிறுத்தையை கண்டு அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாடு, கன்று குட்டி இரண்டுமே அச்சம் அடைந்தன. தொடர்ந்து கன்றுக்குட்டி சிறுத்தையை முட்ட முயற்சிக்கவே சிறுத்தை அங்கு இருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனைக்கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத் துறையினர் வெள்ளிப்பாளையம்,மோத்தேபாளையம் உள்ளிட்ட இரு இடங்களில் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டுகளை மாற்றி அமைத்தும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தை சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள சென்னாமலை கரடு பகுதியில் இருந்து நள்ளிரவு வேளையில் வெளியேறும் சிறுத்தை தொடர்ந்து வெள்ளிப்பாளையம்,மோத்தேபாளையம், அறிவொளி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி தோட்டத்துச் சாலை வீடுகளில் உள்ள நாய்கள், ஊருக்குள் உலாவும் நாய்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் இரவு வேளைகளில் ஊருக்குள் நடமாட முடியாமலும், வீட்டின் வெளியே படுத்து உறங்க முடியாமலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
விளைநிலங்களில் இரவு காவலுக்கு கூட பணியாளர்கள் வருவதற்கு தயங்கி வருகின்றனர். எங்களது அவஸ்தையை வனத் துறையினர் கவனத்தில் கொண்டு தொடர்ந்து எங்களது பகுதியில் உலாவி வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.