தென்னக ரயில்வே சார்பில் திருச்சி-மதுரை ரயில் வழித்தடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி-மதுரை ரயில் வழித்தடத்தில் உள்ள மணப்பாறை ரயில் நிலையத்தை பயணிகள் விரைவு ரயில்கள் கடக்கும்போது எதிர்திசையில் வரும் சரக்கு ரயில்கள் மணப்பாறை ரயில் நிலையத்தின் மற்றொரு நடைமேடையில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
அந்தவகையில் இன்று காலையில் மதுரை-திருச்சி ரயில் வழித்தடத்தில் வந்த ஒரு விரைவு ரயிலுக்காக சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது சரக்கு ரயிலின் அடியில் நுழைந்து மறுபுறத்துக்கு சிலர் சென்றனர். இதனை பார்த்த மூதாட்டி ஒருவரும் சரக்கு ரயிலின் அடியில் சென்று மறுபுறம் செல்ல முயன்றார்.
அந்த வேளையில் எதிர்பாராத விதமாக சரக்கு ரயிலுக்கு சிக்னல் கிடைக்கவே சரக்கு ரயில் எஞ்சின் டிரைவர் ரயிலை இயக்கினார். அப்போது சரக்கு ரயிலின் மத்தியில் பாதையை கடக்க முயன்ற மூதாட்டி செய்வதறியாது பதறினார். இதை அங்கிருந்த ரயில்வே ஊழியர் மற்றும் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக ரயில்வே ஊழியர்கள் மூதாட்டியை தண்டவாளத்தில் அப்படியே படுத்து விடும்படி கூறினர். இதை கேட்ட மூதாட்டி தண்டவாளத்தில் அப்படியே படுத்து கிடந்தார். சரக்கு ரயில் மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்தது.
இதற்கிடையே ரயில்வே ஊழியர்கள் உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்ததோடு சிகப்பு கொடியை ஆட்டியதால், சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தினார். இதையடுத்து மூதாட்டி தண்டவாளத்தில் இருந்து எழுந்து மறுபுறம் சென்றார். அந்த மூதாட்டி எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பி மறுபிறவி எடுத்தார்.
இதற்கிடையே மூதாட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“