Police aspirant hides hi-tech bluetooth device : இந்திய ஜனத்தொகையில் ஒரு அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் வெற்றி பெறுவது என்பது ஒன்றும் அவ்வளவு எளிமையானது அல்ல. மிகவும் ஆழமாக ஒவ்வொரு பாடத்தையும் பொறுமையாக படித்து இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதும் உண்டு. ஆனால் இங்கே உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற சப் -இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்ற தேர்வர் வேற லெவலில் தேர்வு எழுத முயற்சி செய்து இறுதியில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபின் ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், தேர்வு எழுத வந்த நபரை சோதனை செய்த போது காது அருகே மெட்டல் டிடெக்டர் சத்தம் தெளிவாக இருக்கிறது. ஆனால் எப்படி தேர்வு எழுத வந்தார், ஏன் சத்தம் வருகிறது என்பது புரியாத புதிராகவே இருந்துள்ளது. வையர்லெஸ் ஹெட்போன்களை இரண்டு காதுகளிலும் மாட்டியிருப்பதை ஒப்புக் கொண்டார் தேர்வு எழுந்த வந்த அந்த நபர். ஆனால் அவரின் கெட்ட நேரமோ என்னவோ, மிகவும் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட அந்த ஹெட்செட்களை அந்த நபரால் கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை என்பது தான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும், ஒரு இளைஞரை இவ்வளவு தூரம் ஒரு சிக்கலான தொழில்நுட்பத்தை தேர்வு செய்து பரீட்சை எழுத தூண்டுவது என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலரோ இவருக்கு இருக்கும் இந்த திறமையை வைத்தே வேலை தரலாம் என்றும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.