சாலையில் லாரி வருவதை உணராத பள்ளி மாணவி ஒருவர் சாலையை வேகமாக கடக்க முயன்றபோது, மாணவி மீது லாரி மோதாமல் இருக்க போக்குவரத்து காவலர் துரிதமாக செயல்பட்டு மாணவியைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை - சூலூர் திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் செல்வகணேஷ் என்ற காவலர் வாகன போக்குவரத்தை ஒழுங்கு அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் லாரி வருவதை உணராத பள்ளி மாணவி ஒருவர் சாலையை வேகமாக கடக்க முயன்றுள்ளார். லாரி மாணவியின் மீது மோத செல்வதை கவனித்த போக்குவரத்து காவலர் செல்வகணேஷ் துரிதமாக செயல்பட்டு மாணவியை சாலையில் இருந்து வெளியே இழுத்து அப்புறப்படுத்தினார். அதேவேளை லாரியின் ஓட்டுனரும் வேகத்தை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு மாணவி காயங்கள் ஏதுமின்றி உயர் தப்பினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த நிலையில் சாலையைக் கடக்கும் பள்ளி மாணவியை போக்குவரத்து காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அடுத்து, போக்குவரத்து காவலரின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“