வேகத்திற்கும் வலிமைக்கும் பெயர்போன சிறுத்தைக்கு ஒரு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையானாலும், முள்ளம்பன்றியைத் தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை.
இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் அதற்கான தற்காப்பு தகவைப்புடன்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, பாம்புகள் விஷத்துடன் படைக்கப்பட்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் வேட்டையாடுவதற்கு ஏற்றபடி வலிமை, கூர்மையான நகம், பற்கள் என்ற உடலமைப்புடன் உள்ளன. மான்கள் வேட்டை விளங்குகளிடம் இருந்து தப்பி ஓடுவதற்கு வேகமான அதன் மெல்லிய கால்கள் என எல்லா விலங்குகளும் அவை ஜீவிப்பதற்கு ஏற்ற உடல் அமைப்புடன் தான் இயற்கை படைத்துள்ளது.
தங்களின் சிறப்பு உடலமைப்பு, சிறப்பு தன்மைகளைக்கொண்டு அந்தந்த விலங்குகள் தன்னை தற்காத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன.
அந்த வரிசையில், முள்ளம் பன்றி பார்ப்பதற்கு சிறிய விலங்காக இருந்தாலும் அதை வேட்டையாடுவது என்பதும் மிகவும் கடினமானது. வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல வேட்டை விலங்குகளும் முள்ளம்பன்றியை வேட்டையாடுவது கடினம்தான்.
அதற்கு காரணம் அதன் முதுகிலும் பின்புறத்திலும் முள்போன்ற அமைப்புதான். ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், ஒரு நொடியில் முள்களை தொகைபோல் சிலிர்த்து எதிரியிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும். சில நேரங்களில் தாக்கவரும் எதிரி முள்ளம் பன்றியின் முள்கள் குத்தி கடுமையான காயத்துடன் உயிர் தப்பி செல்ல வேண்டியதிருக்கும்.
அத்தகைய முள்ளம்பன்றி ஒன்று நல்ல இருட்டில் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, பின்னால் ஒரு சிறுத்தை வேட்டையாட பிந்தொடர்வதை அறிந்து, திரும்பி சிறுத்தையை நோக்கி வருகிறது. சிறுத்தை இதுதான் சமயம் என்று தாக்கலாம் என்று அருகில் நெருங்கியதுதான் தாமதம் உடனடியாக முள்ளம் பன்றி தனது உடலில் உள்ள முட்களை சிலிர்த்து எதிர்ப்பு தெரிவித்தது. முட்களைப் பார்த்து மிரண்டுபோன சிறுத்தை விட்டால் போதும் என்று அதன் பாதையப் பார்த்து போனது.
இப்படி, சிறுத்தைக்கு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ரமேஷ் பாண்டே குறிப்பிடுகையில், “ஒரு இளம் சிறுத்தை ஒரு ஸ்மார்ட்டான முள்ளம்பன்றியை வேட்டையாடுவது எளிதல்ல. கட்டர்னியாகாட்டில் இருந்து மிகவும் சுவாரஸ்யமான ஒரு வீடியோ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"