இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் காணப்பட்ட அரிய வகை பனிச் சிறுத்தை ஒன்று கம்பீரமாக ராஜநடை போட்டு செல்லும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இமயமலை அடிவாரப் பகுதியான ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மலைகள், மரங்கள், சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு காணப்படுகிறது. ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியில் பனிப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக் கூடிய அரிய பனிச் சிறுத்தை ஒன்று உலாவுவதை வீடியோ எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
சுசந்தா நந்தா என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பனி சூழ்ந்த பகுதியில் பனிச்சிறுத்தை கம்பீரமாக ராஜநடைபோட்டு உலவும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அந்த சிறுத்தை வழக்கத்திற்கு மாறாக மற்ற சிறுத்தைகளைவிட சாம்பல் பச்சை நிற கண்களுடன் நீண்ட வாலுடன் நீண்ட ரோமங்களுடன் உலாவருகிறது. பனிச் சிறுத்தை வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து பகிர்ந்து வருவதால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது.