நடிகை சோனாக்ஷி சின்ஹா விமானப் பயணத்தின் போது தனது சூட்கேஸ் சேதமடைந்ததை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர் கோலிவுட்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் லிங்கா படத்தில் நடித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும் நன்றாக இருந்த தனது சூட்கேஸ் விமான பயனத்தின்போது சேதமடைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு விமானப் போக்குவரத்து நிறுவனமும் சூட்கேஸ் தயாரிப்பு நிறுவனமும்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் சோனாக்ஷி சின்ஹா தனது சூட்கேஸின் கைப்பிடி மற்றும் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, சூட்கேஸின் சக்கரம் ஆகியவை சேதமடைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
சோனாக்ஷி சின்ஹாவின் இந்த வீடியோ இணையத்தில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதையடுத்து, அவரது ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர். ஒரு சிலர் தங்களுக்கும் இதே போல நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சோனாக்ஷி சின்ஹாவின் டுவிட்டருக்கு உடனடியாக பதிலளித்த இண்டிகோ விமான நிறுவனம், “ஹை சோனாக்ஷி, உங்கள் சூட்கேஸ் சேதமடைந்ததற்கு வருந்துகிறோம். நாங்கள் உங்களுடன் பேச விரும்புகிறோம்” என்று சோனாக்ஷி சின்ஹாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும், “சோனாக்ஷி, எங்கள் குழுவுடன் தொடர்புகொண்டதற்கு நன்றி. உங்கள் சூட்கேஸ் பற்றி நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அதை நாங்கள் எங்களுடைய லக்கேஜ்களைக் கையாளும் குழுவிடம் எடுத்துச்சென்றுள்ளோம். உங்களுடைய எதிர்கால திட்டங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் உங்களைப் பார்ப்போம் என்று நம்புகிறோம்! - சித்தி” என்று இண்டிகோ நிறுவனம் டுவிட் செய்துள்ளது.
அதே நேரத்தில், நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் இந்த டுவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பல டுவிட்டர் பயனாளர்கள், “இது விமான நிறுவனங்களில் நடக்கும் ஒரு வழக்கமான விவகாரம் என்றும், ஒருவர் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு இது குறித்து புகார் அளிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அண்மையில் இந்திய கிளாசிக்கல் இசைக் கலைஞர் சுபேந்திர ராவ், தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் நியூயார்க்கிற்கு செல்லும் விமானத்தில் தனது சித்தார் சேதமடைந்ததாகக் குற்றம் சாட்டினார்.