சீனாவில் நடத்தப்பட்ட ஒரு வினோத போட்டியில் பங்கேற்ற டாங் என்ற பெண் 8 மணி நேரம் செல்போனை தொடாமல் இருந்து ரூ.1.16 லட்சம் பரிசுத் தொகையை வென்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
தென்மேற்கு சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு வினோதமான போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன போட்டி என்றால், மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாமல் 8 மணிநேரம் பதற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த போட்டி தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் நடந்தது, அங்கு போட்டியாளர்கள் உடல் வலிமையை விட மன சகிப்புத்தன்மையின் சோதனையை எதிர்கொண்டனர்.
இந்த போட்டிக்காக 100 விண்ணப்பதாரர்களைக் கொண்ட ஒரு குழுவிலிருந்து பத்து போட்டியாளர்கள் நவம்பர் 29 நடந்த போட்டியில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு ஷாப்பிங் சென்டரில் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட படுக்கையில் 8 மணிநேரம் படுத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தப் போட்டிக்கான விதிகல் மிகவும் கடுமையாக இருந்தன: தொலைபேசிகள், டேப்லெட்டுகள் அல்லது மடிக்கணினிகள் என எதுவும் வைத்திருக்கக் கூடாது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு போட்டியாளர்கள் தங்கள் மொபைல் போன்களை ஒப்படைத்துவிட வேண்டும். மேலும், அவர்களுக்கு அவசரத் தேவைகளுக்கு அழைப்புகள் மேற்கொள்வதற்கான திறன் கொண்ட ஒரு பேசிக் மாடல் மொபைல் போன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
இந்தப் போட்டி நேரம் முழுவதும், போட்டியாளர்கள் மணிக்கட்டு பட்டைகள் (wrist straps) பயன்படுத்தி, தூக்கம் மற்றும் பதற்றம் நிலைகள் நாடித்துடிப்பு மூலம் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலோ அல்லது கவலையின் அறிகுறிகள் தெரிந்தாலோ போட்டியில் அடைந்தவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த போட்டியின் நோக்கம் பங்கேற்பாளர்களின் மன உறுதியையும், தொழில்நுட்பம் இல்லாத நிலையில் அமைதியாக இருக்கும் திறனையும் சோதிப்பதாகும். நிதானமாக இருக்க, போட்டியாளர்களில் பலர் புத்தகங்களைப் படித்தனர் அல்லது வெறுமனே ஓய்வெடுத்தனர். அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே உணவும் பானங்களும் வழங்கப்பட்டன. இருப்பினும், பாத்ரூம் 5 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏகப்பட்ட விதிகள் விதிக்கப்பட்டன.
இந்த போட்டியை மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப எளிதான போட்டி, வெற்றி பெற்று விடலாம் என்றுதான் தோன்றும். ஆனால், இது எப்படி இருக்கும் என்றால், வடிவேலு சும்மா இருப்பது என்றால் சாதாரணம் இல்லை என்று சவால் விடுவாரே அது போல, மொபைல் போன் இல்லாமல் பதற்றம், கவலை இல்லாமல் இருப்பது என்பதும் எளிது இல்லை.
இந்த போட்டியில் பங்கேற்றவர்களில், டாங் என்ற பெண் மட்டும் 8 மணி நேரம் மொபைல் போன் இன்றி பதற்றம் இல்லாமல், கவலை இல்லாமல் அமைதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த பெண் ஒரு நிதி நிறுவனத்தின் விற்பனை மேலாளராக பணி புரிகிறார். டாங் 100-க்கு 88.99 மதிப்பெண்களுடன் இந்த போட்டியில் வென்றார். அமைதியாக இருந்ததோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் தவிர்த்து, படுக்கையில் அதிக நேரம் இருந்த டாங்குக்கு சீனாவின் பணம் 10,000 யுவான், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டுள்ள்து.
இந்த வினோத போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டாங் சீன ஊடகங்கள் மூலம் பிரபலமாகியுள்ளார். இப்போது சீனாவில் மட்டுமல்ல, டாங் உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த போட்டியில் டாங் பைஜாமா உடை அணிந்து பங்கேற்றதால் ‘பைஜாமா சகோதரி’ என்று அழைக்கப்படுகிறார். மொபைல் போனைத் தவிர்த்து தனது அதிக நேரத்தை செலவிடும் டாங்கின் வாழ்க்கை முறை சீன மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
உலக அளவில் இந்த போட்டி கவனத்தை ஈர்த்தாலும், யார் இந்த போட்டியை நடத்தியது, ஸ்பான்சர் செய்தது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இன்றைய பரபரப்பான உலகத்தில் மொபைல் போனுக்கும், கேட்ஜெட்களுக்கும் அடிமையாகிவரும் சூழலில், நோ ஃபோன் என்ற என்ற இந்த போட்டி மொபைல் போனைத் தவிர்ப்பதற்கான ஊக்கமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.