கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் வெளியே செல்பவர்களை, ‘வெளியே போகாதீங்கனு ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டிங்களா’ என்று குழந்தை நட்சத்திரமான சிறுமி மானஸ்வி கோபமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 22,000 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதே போல, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தடையில்லை.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சிலர் வெளியே சென்றுவருகிறார்கள். இதனால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வெளியே வருபவர்கள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
ஊரடங்கை மதிக்காமல் அவசியம் இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், டிவி சீரியல்கள் மற்றும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மானஸ்வி, ஊரடங்கை மதிக்காமல் வெளியே செல்பவர்களை ‘வெளியே போகாதீங்கனு ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டீங்களா?’ என்று மழலை மொழியில் கோபமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது, “உங்களுக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா? நியூஸ்ல பத்திரிகைல, டிவியில, எஃப்.எம்ல, ஆர்ட்டிஸ்ட்ங்க எல்லாருமே சொல்றாங்க. ஒரு தடவை சொன்னா நீங்க கேட்கவே மாட்டீங்களா. இப்போ நீங்க அங்க போவிங்க, வெளியில போவிங்க எங்காச்சு தொட்டுட்டு திரும்ப வீட்டுக்கு வருவிங்க. அப்புறம் அவங்களுக்கு பரவும், அதற்குப் பிறகு அவங்களுக்கு பரவும்... நீங்க வெளியில போகாம இருந்தாதான எல்லோரும் ஆஃபிசுக்கு அங்க இங்க எல்லாம் போக முடியும். நீங்க வெளியில போகாம இருந்தாதான் கொரோனா குறையும். அப்போதான் எல்லோரும் எல்லா இடத்துக்கும் போக முடியும். உங்களுக்கு ஆஃபீஸ் போக முடியும். எல்லா பசங்களும் ஸ்கூலுக்கு போக முடியும். என்னாலயும் ஸ்கூலுக்கு போக முடியும். நீங்க வெளியில போகாம இருந்தால் மட்டும்தான் இந்த கொரோனா குறையும். நீங்க மனசுக்குள்ள மட்டும் இந்த கொரோனா குறையனும் கொரோன குறையனும் என்று சொல்லிக்கொண்டு வேண்டினால் மட்டும் போதாது. நீங்கள் வெளியில போகாமல் இருந்தால் கண்டிப்பாக கொரோனா குறையும். வண்டியில எல்லோரும் ஃபேமலியோட போறீங்க. போகாம இருந்தாதானே பரவாம இருக்கும். நான் டிவியில எல்லாம் பார்க்கிறேன். எல்லோரும் கையெடுத்து கும்பிடறாங்க போகாதீங்க போகாதீங்கனு... ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? எல்லாம் சொல்றாங்க இல்ல. அப்புறம் எதற்கு? போகாம இருந்தீங்கனா சரி எல்லாம் போய்விடும். நீங்க போகாமல் இருந்தீங்கனாலே அந்த கிருமி எல்லாம் அய்யோ மக்கள் எங்க மக்கள் எங்கனு அது தேடி தேடியே போய்விடும். ஆனால், நீங்க அங்க போய் இருந்தீங்கனா இதோ ஒருத்தர் இருக்காங்கனு உங்க உடம்புக்குள்ள போய் பரவிடும். எல்லோரையும் பார்க்கிறேன். எல்லோரும் ஃபேமலியோட பைக் எடுத்துட்டு கார் எடுத்துட்டு போறீங்க. என்ன மாதிரி குட்டிக் குழந்தைங்க எல்லாம் எப்படி ஸ்கூலுக்கு போவாங்க? நீங்க போகாமல் இருந்தாதானே எல்லா பிரச்னைகளும் குறையும். இதெல்லாம் தெரிய வேண்டாம் உங்களுக்கு? எல்லோரும் படிச்சவங்கதானே? வீட்ல இருக்கலாம் அப்போதான் கொரோனா போகும்னு உங்களுக்கு தோனாதா? எங்களை மாதிரி குட்டி பசங்களுக்கு எல்லாம் தோனுது உங்களுக்கு தோணல இல்லை. ஏங்க இப்படி பண்றீங்க?” என்று மழலை மாறாத மொழியில் கோபமாக கேட்கிறார்.
இந்த குட்டி பாப்பாவின் அறிவுரையை கேட்டு கொரோனா பரவாமல் தடுக்க வீட்டிலேயே இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.