வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப் பாம்பை துணிச்சலாக மீட்ட தமிழக பெண் வன காவலர்களை ஐ.எஃப்.எஸ் அதிகாரி புகைப்படத்தை வெளியிட்டு பாரட்டு தெரிவித்துள்ளார். பெண் வன காவலர்கள் தைரியமாக மலைப்பாம்பை மீட்ட புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சபாஷ் 'தைரிய லட்சுமி'கள் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆண்கள் ஆதிக்கம் இருந்த எல்லா துறைகளிலும் தடைகளைத் தகர்த்து ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல ஆண்களையும் விஞ்சி பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், வனத் துறை பணிகளிலும் பெண்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் நமது தமிழக வன காவலர்கள் அஞ்சாமல், வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு மீண்டும் காட்டில் விட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறை ஐ.எஃப்.எஸ் அதிகாரி இளையராஜா தனது ட்விட்டர் பெண் வன ஊழியர்கள் ஒரு பெரிய மலைப் பாம்பை பிடிக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி வனப்பகுதியைச் சேர்ந்த இந்த பெண் வன காவலர்களுக்கு பாராட்டுக்கள். அவர்கள் வலையில் சிக்கிய ஒரு மலைப்பாம்பை தைரியமாக காப்பாற்றி பாதுகாப்பாக காட்டுக்குள் விட்டனர்.” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி வனப்பகுதியைச் சேர்ந்த பெண் வன காவலர்கள் வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்ட புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், சபாஷ் 'தைரிய லட்சுமி'கள் என்று பெண் வன காவலர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"