/indian-express-tamil/media/media_files/2025/08/25/covai-elephant-2025-08-25-09-02-38.jpg)
வனத்துறை ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய ஒற்றை யானை; வைரலாகும் வீடியோ!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தேவராயபுரம் பகுதியில் வனத்துறையினரின் வாகனத்தை ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்கி, அதன் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வனத்துறை ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தொண்டாமுத்தூர், தேவராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு காட்டு யானை இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், யானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேவராயபுரம் மகாலட்சுமி கோவிலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாக வனத்துறையினர் ஜீப்பில் யானையை விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது ஒரு கட்டத்தில், காட்டு யானை திடீரென நின்று வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து மோதியது.
கோவை: ஆக்ரோஷமான காட்டு யானை தாக்கியதில் வனத்துறை வாகனம் சேதம்; ஊழியர்கள் உயிர் தப்பினர்!#Covai#elephantattackpic.twitter.com/LZcvEPFAnN
— Indian Express Tamil (@IeTamil) August 25, 2025
இந்த மோதலில் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சிதைந்தது. சுதாரித்துக்கொண்ட வனத்துறை ஊழியர்கள் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று யானையிடம் இருந்து தப்பி, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். வனத்துறையினரின் வாகனத்தை யானை ஆக்ரோஷமாக தாக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.