/indian-express-tamil/media/media_files/2025/09/10/delhi-mahindra-car-2025-09-10-14-08-10.jpg)
புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் சடங்கு.. எலுமிச்சை பழம் ஏற்ற முயன்றபோது நேர்ந்த சோகம்!
புதிய கார் வாங்குவது என்பது அனைவருக்கும் மறக்க முடியாத தருணம். குறிப்பாக, அந்தப் புதிய காரை சடங்குடன் வரவேற்பது நமது கலாசாரத்தில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால், இந்த சடங்கு ஒருவரின் கனவையும், கார் ஷோரூமின் கண்ணாடியையும் நொறுக்கிய ஒரு விபரீத சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது.
கார் வாங்கிய மகிழ்ச்சியில் சடங்கு...
29 வயதான மாணி பவர் என்ற பெண் சுமார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை வாங்கினார். தனது புதிய காரை ஷோரூமில் இருந்து வெளியே எடுப்பதற்கு முன், சடங்கைச் செய்ய முடிவு செய்தார். காரின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சையை வைத்து, மெதுவாக காரை ஓட்டி அதை நசுக்குவதுதான் அந்தச் சடங்கு. இந்த சடங்கு பொதுவாகவே, வாகனத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல், நல்ல சகுனத்திற்காகச் செய்யப்படுவது. ஆனால், முதல் மாடியில் இருந்த ஷோரூமில் இந்த சடங்கைச் செய்யும்போது, மாணி பவர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்திவிட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து
மகிழ்ச்சியில் இருந்த மாணி பவர் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதும், கார் மின்னல் வேகத்தில் முன்னால் சென்றது. காரின் முன்னிருந்த கண்ணாடி சுவரை உடைத்துக்கொண்டு, கார் முதல் மாடியில் இருந்து நடைபாதையின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் மாணி பவருடன், ஷோரூம் ஊழியர் விகாஸ் என்பவரும் காரில் இருந்தார். நல்லவேளையாக, கார் கீழே விழுந்தவுடன் ஏர்பேக்குகள் திறந்ததால், இருவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிய வாகனத்தை வாங்கும்போது, இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.