இன்று காலை நடந்த ராம ராஜ்ய யாத்திரையில் துவங்கி நாடோடிகள் 2 படபிடுப்பு வரை அனைத்தும் இன்றைய டாப் டிரெண்டிங்க் தான். இன்றைய டாப் ஹாஷ்டாகுகளையும் அதன் விவரங்களையும் ஒவ்வொன்றாக அறிந்துக்கொள்ளவோம்.
#Rathyatra
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று(மார்ச் 20) காலைத் தமிழகம் வந்தது. இந்நிகழ்வை எதிர்க்கும் வகையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் சென்னையில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தின. நெல்லையில் நடைபெற்று வரும் ராம ராஜ்ய ரத யாத்திரையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர். ரத யாத்திரை நிகழ்வின் எதிரொலியாய் நிகழ்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
#RIPNatarajan
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் நடராசனின் உயிர் சென்னை குளோபல் மருத்துவமனையில் பிரிந்தது. இதையடுத்து, அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகியுள்ள சசிகலா பரோலில் வெளிவந்துள்ளார். 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா தன் கணவர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறார். இந்தச் செய்தியை பொது மக்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
#PeriyarStatue
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அருகே அமைந்துள்ள விடுதி கிராமத்தில், தந்தை பெரியாரின் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதைப் புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் ஆய்வு செய்தார். இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் முழுவது கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சிலைகள் உடைப்புக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டியுள்ளார்.
#39Indians
2014 -ம் ஆண்டு ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் இறந்துவிட்டதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். மொசூல் நகரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 2017-ம் வருடம் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து மனம் உடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டுத் தர வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தினர். மொசூல் நகரில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் டிஎன்ஏ ஆய்வு செய்ததில் 70% சதவீதம் ஒத்துப் போவதாகவும் 39 இந்தியர்களும் இறந்தது உறுதியாகியுள்ளது என்று சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். இச்செய்தி மறைந்தோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Naadodigal2
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " பட உருவாக்கம் நடைபெற்றுவருகிறது. இதில் சசிகுமார் கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், மற்றும் பலர் நடிக்கிறார்கள். அதில் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்று மதுரையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் படக் குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சென்னைவாசிகளின் பார்வையை அதிகம் எட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.