New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/11/7uMCgSK8bjVSVpcEX2JW.jpg)
திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் காபி குடித்த பிறகு மீந்திருக்கும் துகள்களை வைத்து பாரம்பரியமாக சொல்லப்படும் எதிர்கால கணிப்பு முறையை ChatGPT-யில் மேற்கொண்டார்.
தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், ChatGPT வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஏ.ஐ பயன்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அசாதாரணமான ஒரு நிகழ்வாக, கிரேக்கப் பெண் ஒருவர் தனது கணவரின் துரோகத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது.
கிரீக் சிட்டி டைம்ஸின் கூற்றுப்படி, திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தாயான அந்த பெண், காபி குடித்த பிறகு அதில் மீதமிருக்கும் துகள்களை கொண்டு பாரம்பரியமாக சொல்லப்படும் எதிர்கால கணிப்பு முறையான டஸ்ஸோகிராஃபியை அறிந்து கொள்ள ChatGPT-யின் உதவியை நாடினார். அதனடிப்படையில், தன்னுடைய மற்றும் தனது கணவரின் காபி கோப்பைகளில் இருந்த துளின் புகைப்படங்களை பதிவேற்றிய அவர் அதற்கான கணிப்பின் விளக்கத்தை கூறுமாறு ChatGPT-யிடம் கேட்டுள்ளார்.
இதற்காக, தாம் பெற்ற பதில் அதிர்ச்சிகரமாக இருந்ததாக அப்பெண் கூறியுள்ளார். அதன்படி, அப்பெண்ணின் கணவர் மற்றொரு இளம்பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதன் மூலம் அவர்களது குடும்பத்தை அழிக்க முயற்சி செய்வதாகவும் ChatGPT எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. "E" என்ற முதல் எழுத்தைக் கொண்ட ஒரு பெண்ணுடன், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் தொடர்பில் இருப்பதாகவும் ChatGPT கூறியதாக தெரிகிறது.
உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்திற்கு பேசிய அவரது கணவர், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்தார். "நான் அதை முட்டாள்தனம் என்று கூறினேன். ஆனால், என் மனைவி அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டாள். என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாள். நாங்கள் விவாகரத்து செய்யப் போகிறோம் என்று எங்கள் குழந்தைகளிடம் சொன்னாள். பின்னர் எனக்கு ஒரு வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது தான் இதன் தீவிரத்தை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.
இத்தகைய மாய விஷயங்களை தன்னுடைய மனைவி நம்புவது இது முதல் முறை அல்ல என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏ.ஐ கணித்த மூன்று நாட்களுக்குள், அப்பெண் தனது கணவருக்கு முறைப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட கணிப்புக்கு சட்டப்பூர்வ மதிப்பு இல்லை என்று அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினார். "குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி" என்று வழக்கறிஞர் கூறினார்.
இந்த சம்பவம் கிரேக்க சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. பல பயனர்கள் நவீன உறவுகளில் தொழில்நுட்பம் மற்றும் மூடநம்பிக்கையின் ஆதிக்கத்தை கேள்வி எழுப்புகின்றனர். சட்ட வல்லுநர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இத்தகைய வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவால் கூறப்படும் கூற்றுகளுக்கு நீதிமன்றத்தில் எந்த மதிப்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.