Advertisment

பிளஸ் டூ முதல் எம்.பி.பி.எஸ் வரை... மாணவர்களுக்கு சலுகைகளை அறிவித்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்

எய்ம்ஸ், ஐ.ஐ.டி, தேசிய சட்டப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும் – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கான முக்கிய அறிவிப்புகள்

author-image
WebDesk
New Update
chennai budget

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பட்ஜெட்டில் கல்விக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளில் தகுதிபெற்று தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை சென்னை மாநகராட்சியே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

திங்களன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதையும் படியுங்கள்: TNPSC தேர்வில் முறைகேடு? இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; பி.டி.ஆர் விளக்கம்

கூட்டு நுழைவுத் தேர்வு (JEE), பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று எய்ம்ஸ், ஐ.ஐ.டி, தேசிய சட்டப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும். இது குறித்து விரைவில் தனி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

12 ஆம் வகுப்பு தேர்வில் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாலை நேர சிறு தீனி வழங்கப்படும்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.26 கோடியில் மாதிரிப் பள்ளி கட்டப்படும். 10 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

சர்வதேச விவகாரங்களில் மாணவர்களின் அறிவை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ‘ஐக்கிய நாடுகள் சபை’ உருவாக்கப்படும்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.

சென்னைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் உடனடியாகத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 பொது அறிவிப்பு அமைப்பு அமைக்கப்படும்.

வளர் இளம் பருவத்தில் (Adolescent Stage) மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே, பிரச்சினைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (கவுன்சிலர்கள்) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி (கையேடு), மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி (எலக்ட்ரானிக்), ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் மரக்காஸ் போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பை வழங்கி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தலைமை பண்பையும் உயர்த்த வழிவகை செய்யப்படும்.

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டங்களின் போது (மாதத்திற்கு ஒருமுறை) பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் பள்ளிகளின் கல்வி மேம்பாடுத் திட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும்.

சென்னைப் பள்ளிகளில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும். இவ்வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறிப்பண்புகள் கற்பிக்கப்படும். இது சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களை நல்லொழுக்கம் மற்றும் படிப்பிலும் சிறந்து விளங்க உதவும்.

சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment