எந்த ஒரு தேர்விலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும், பெண்கள் வளர்ச்சிக்காகவும் மற்றும் ஊரக வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுதான் எனது நோக்கம் என UPSC தேர்வில் வெற்றி பெற்ற சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் சுஷ்மிதா ராமநாதன். UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 528 இடத்தில் வெற்றி பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையும் படியுங்கள்: UPSC Results: சிவில் சர்வீசஸ் பணிகளில் அதிக அளவில் நுழையும் பெண்கள்; மூன்றில் ஒரு பங்கு தேர்ச்சியுடன் புதிய வரலாறு
இவரது தங்கை ஐஸ்வர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்று, தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுஷ்மிதா, கிராமத்தில் பிறந்த நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் அதற்கு முழுமையாக படிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி அடித்தளம் போட்டவர்கள் எனது பெற்றோர்கள் தான். எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.
பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம், கல்வி மூலமாகதான் முன்னேற்றம் அடையமுடியும் என எனது அம்மா தான் முழுமையாக கூறிவந்தார்கள். பெண்கள் வளர்ச்சிக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுதான் எனது நோக்கம். கிராமத்தில் இருந்து வந்த நான், கல்வி மூலமாக தான் இந்த தேர்வில் சாதனை பெறமுடிந்தது.
கல்வி ஒரு முக்கிய படிக்கட்டு. என்னை போலவே கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும். கிராமப்புற மக்களுக்கும் சரி, குறிப்பாக பெண்களுக்கு கல்வி முக்கியம். கல்வி பயிலுவதில் ஒரு வித சாவல்கள் இருந்தாலும் அனைவருக்கும் கல்வி பயில அரசு பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. முக்கியமாக இலவச புத்தகம், உணவு, உதவி தொகை என பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்டு கல்வி பயின்று முன்னேற்றம் அடையவேண்டும் என கேட்டுகொண்டார்.
UPSC தேர்வுக்கு அதிக நேரம் படிக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் குறிகோள் வைத்து ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம் எனவும் கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil