Tamilnadu Govt arts and science colleges counselling starts august 5: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
2022-23 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சம் இடங்களுக்கு எதிராக சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ மார்க் தேவையில்லை; சென்னை ஐ.ஐ.டி-யில் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சலிங்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குமாறு கல்லூரிகளிடம் கல்லூரி கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், புதன்கிழமைக்குள் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடுமாறு கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.
”இளங்கலை விண்ணப்பதாரர்களின் தரவுகள் ஏற்கனவே இணையதளத்தில் உள்ளது. அதனை கல்லூரி முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து செயல்முறையைத் தொடங்கலாம்," என்று கல்லூரி கல்வி இயக்குனர் எம்.ஈஸ்வரமூர்த்தி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை முடித்துவிட்ட கல்லூரிகள் ஆஃப்லைனில் விண்ணப்பங்களை வழங்கவும், விதிமுறைகளின்படி சேர்க்கை வழங்கவும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil