தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால், இந்த ஆண்டும் காலியிடங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: ஐ.ஏ.எஸ்-க்கு இணையான ஐ.இ.எஸ் தேர்வு: இந்த 4 என்ஜினீயரிங் குரூப் மாணவர்கள் மட்டும்தான் எழுதவே முடியும்!
இந்த ஆண்டு கவுன்சலிங்கில் 442 கல்லூரிகள் பங்கேற்கின்றன. அவற்றில் 1,59,542 இடங்கள் உள்ளன. பொறியியல் கவுன்சலிங் செயல்முறையில் முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு நடைபெறும்.
அந்தவகையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் முதல் பொது சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதுவரை பொதுப் பிரிவினர், கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரிவுகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ளவர்கள் என மொத்தம் 22,761 பேர் அழைக்கப்பட்டனர். முதல் சுற்றில் 14,227 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு அதிக ஆர்வம் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் மிகுந்த விருப்பத்துடன் தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 80 மாணவர்களில் 42 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
கல்லூரிகளில், சென்னை காலவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் முதல் சுற்றில் 92.51% இடங்கள் நிரம்பியுள்ளன. தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் கல்லூரியில் உள்ள 523 இடங்களில் தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உட்பட மொத்தம் 484 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) காரைக்குடி 90% இடங்கள் நிரம்பியுள்ள இரண்டாவது நிறுவனம் ஆகும்.
அடுத்தப்படியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 89.57% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 652 இடங்களில் 588 இடங்கள் பொது கலந்தாய்வில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 52 இடங்களில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொழிற்கல்வி பிரிவில் உள்ள அனைத்து 15 இடங்களும் நிரம்பிவிட்டன.
அடுத்ததாக, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 939 இடங்களில் 839 இடங்கள், அதாவது 89.05% நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 113 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 84.53% இடங்கள் நிரம்பியுள்ளன. இந்தக் கல்விக் குழுமம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய கல்லூரியான, தன்னாட்சி அல்லாத சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் நிறுவனத்தில், 74.46% இடங்கள் நிரம்பியுள்ளன.
50% இடங்களை நிரப்பிய 20 கல்லூரிகளில் பெரும்பாலானவை சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ளவை. கோவையைச் சேர்ந்த சுயநிதி மற்றும் அரசுக் கல்லூரிகள் உட்பட ஒரு சில கல்லூரிகளும், மதுரையைச் சேர்ந்த தியாகராஜர் பொறியியல் கல்லூரியும் விரைவில் இடங்கள் நிரம்பும் பிற பகுதிகளில் உள்ள கல்லூரிகளாகும், என்று கல்வியாளர் அஷ்வின் பகுப்பாய்வு காட்டுகிறது.
"இந்த ஆண்டும் பொறியியல் கவுன்சிலிங்கின் முடிவில் 50,000 இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்,” என்று கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil