தமிழகத்தில் உள்ள 37 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டில் 2 ஆம் சுற்று கவுன்சிலிங் வரை ஒரு மாணவர் கூட சேர்க்கைப் பெறவில்லை. மேலும், சுமார் 50% கல்லூரிகள் 10 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப முடிந்தது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்றில் 89,694 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: TNEA Counselling; எஞ்ஜினீயரிங் கவுன்சலிங் ரவுண்ட் 3; எந்த கோர்ஸ் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்?
இந்தநிலையில், 2 சுற்று கலந்தாய்வுகளின் முடிவில் 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கேற்ற மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில், 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப முடிந்தது. 126 கல்லூரிகளில் 50%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
176.99 முதல் 142 மதிப்பெண்கள் வரையிலான இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்ற 64,286 மாணவர்களில் 35,474 பேர் மட்டுமே இடங்களைப் பெற முடிந்தது. இதுவரையிலான இரண்டு சுற்று கவுன்சிலிங்கில் மொத்தம் 50,615 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இருப்பினும், நடப்பு கல்வியாண்டில் முதல் இரண்டு சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, முந்தைய ஆண்டை விட கவுன்சிலிங் சுற்றுகள் குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம். இருந்த போதிலும், கடந்த ஆண்டை விட முதல் இரண்டு சுற்றுகள் அதிக இடங்களை நிரப்பியதாக கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
”நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில்துறை தொடர்புகள் கொண்ட 41 பொறியியல் கல்லூரிகள் ஆரம்ப இரண்டு சுற்றுகளில் 80 சதவீத இடங்களை நிரப்பியுள்ளன. இந்த கல்லூரிகள் கோர் பிரிவுகளில் கூட வெற்றிகரமான சேர்க்கைகளைக் கண்டுள்ளன,” என்று கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் உள்ளது. இருப்பினும், இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கைத் தொடர்ந்து, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகள் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆர்வம் உள்ளது, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர் சேர்க்கையை ஈர்க்க போராடும் கல்லூரிகளில் கவுன்சிலிங்கிற்கு பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனங்களுக்குள் உள்ள உள்கட்டமைப்பை ஒரு குழு மதிப்பீடு செய்யும். குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரிகள் தகுந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil