Venkatesh Kannaiah
Andhra Pradesh Assembly Election Results 2019 : மத்தியில் மாபெரும் கூட்டணி அமைக்கலாம் என்ற கனவில் இருந்த சந்திரபாபு நாயுடுவையே புலம்ப வைக்கும் விதமாக வெளியாகியுள்ளது ஆந்திர மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள். இரண்டு தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது.
சந்திரபாபு நாயுடு, அவர் மகன் நாரா லோகேஷ், மற்றும் மூத்த தலைவர்களும் அங்கு தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தொகுதிகளில் 25ல் 24ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. 175 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலுல் 150 இடங்களை ஜெகன் மோகன் ரெட்டி கைப்பற்றியுள்ளார்.
திரைப்பட நடிகர் மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வந்தார். 50% மேலான வாக்கு வங்கிகளை ஜெகன் மோகன் கைப்பற்றியுள்ளார். சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சியில் தன் மக்களுக்கு, விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை செய்தார். அது அவரை மீண்டும் அரியணையில் அமர்த்தும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் நிலை என்னவோ வேறாக முடிந்துவிட்டது.
நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இன்றும் கூட 39% வாக்குவங்கிகளை தன் வசம் வைத்துள்ளது. பாஜகவிற்கு ஒரு இடத்திலும் வாக்குகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 1%க்கும் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சபரிமலையில் சொதப்பிய இடதுசாரி! சரித்திர வெற்றியை உறுதி செய்த கேரள காங்கிரஸ்
பாதயாத்திரையும், சில அதிகமான பிரச்சாரங்களையும் 2014ம் ஆண்டு செய்தது போலவே இந்த ஆண்டும் செய்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் வெற்றிக்கு மிக நெருங்கிச் சென்று தோல்வியை அவருக்கு பரிசளித்தது அன்றைய தேர்தல் முடிவுகள். தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் பலமான கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் பாஜகவுடனும், நடிகர் பவன் கல்யாணுடனும் தற்போது நாயுடு இல்லை. தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இணைந்திருந்தார்.
11:30 மணி வரையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்கள் மற்றும் தலைவர்களுக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள்.