Tamil Nadu Lok Sabha Election 2019 Poll Time, Polling Booth:: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. கடைசி நேரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 தொகுதிகளுக்கே தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – Tamil Nadu Lok sabha Election 2019 Polling Live: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு லைவ்
இந்தியாவில் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடக்கிறது. 12 மாநிலங்களில் 96 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்கிறது.
மேலும் படிக்க – Tamil Nadu Assembly By Election 2019 Polling Live: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் லைவ்
தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் வியாழனன்று நடக்கிறது.
தேனி ஆண்டிப்பட்டியில் ரூ 1.48 கோடி பணம் சிக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது வருமான வரித்துறை. எனவே இங்கும் தேர்தல் ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சாத்தூர் இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் இந்த நிகழ்வு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் சப்ளை தொடர்பான புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மோகல்வாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக அமமுக நிர்வாகி பிரபு தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ 5 ஆயிரம் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார். வேறு சில இடங்களில் கிடைத்த பணப்பட்டுவாடா குறித்த வீடியோக்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட இருக்கின்றன. அனைவரும் வாக்களிக்க வசதியாக இந்த அறிவிப்பை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கிறது.