AR Murugadoss Arrest Rumour: சர்கார் பட விவகாரத்தில் அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்ய அவரின் வீட்டின் முன் போலீஸ் செல்வதாக சன் பிக்சர்ஸ் அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. முருகதாஸுக்கு ஆதரவாக விஷால் உள்பட பலர் குரல் கொடுத்த நிலையில், பின்னர் அது வதந்தி என தெரிந்தது. எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சர்கார் படத்தின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாசை கைது செய்வதற்காக போலீசார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளதாக நேற்று மாலை சன் பிக்சர்ஸ் ஒரு பரபரப்பு தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த தகவலால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு கிளம்பியது. பல தியேட்டர்களில் பதற்றமான சூழலும் நிலவியது.
சர்கார் திரைப்படத்தில், அரசுக்கு எதிரான பல சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகள் உடனே நீக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக அரசு கடுமையாக வலியுறுத்தியது. இதையடுத்து, அரசை தவறாக சித்தரித்துள்ளாகக் கூறி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்தில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் விஜய்யின் கட் அவுட் அனைத்தையும் ஆவேசமாக கிழித்தெறிந்தனர்.
Sarkar Controversy: ஏ.ஆர். முருகதாஸ் கைது வதந்தி
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவியது. இதனை உறுதி செய்வதை போல் அவருடைய சாலிகிராமம் வீட்டின் முன் போலீசார் குவிந்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தாங்கள் வரவில்லை என்றும், அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவே வந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.
Read More: சர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை
பின்னர் இது குறித்து ஏ. ஆர். முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்தார். அதில், “போலீஸ் எனது வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டினர். ஆனால் வீட்டில் இல்லாத காரணத்தால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தற்போது என் வீட்டின் முன்பு எந்த போலீஸும் இல்லை என்று எனக்கு தெரிவித்துள்ளனர்.” என்று கூறியிருந்தார்.
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது.
முன் தினம் கைது வதந்தியில் சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், மறுநாள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி கைது நடவடிக்கையில் இருந்து தடை பெற்றார்.