Bigg Boss Rekha: நடிகை ரேகா 80-களின் இறுதியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ரேகாவின் புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், பாட்டுக்கு நான் அடிமை போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கிறது.
அப்படி என்ன மருந்து தரப்பட்டது? மூன்றே நாட்களில் வீடு திரும்பும் ட்ரெம்ப்!
அதோடு தூர்தர்ஷன், சன் டிவி, விஜய் டிவி, மலையாளம் மற்றும் தெலுங்கு சேனல்களில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ-க்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக ரேகா இடம் பெறுவார், என்ற தகவல் பரவியது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால், ரசிகர்கள் ஒருவித குழப்ப நிலையில் இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பதினாறு பேரும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக இடம்பெற்றார். மேடையில் புன்னகை மன்னன் ஜோடியை இவ்வளவு வருடம் கழித்து, ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பும் ரசிகர்களுக்குக் கிடைத்தது.
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், ஊட்டியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். ஜோஸப்பின் என்ற இயற்பெயர் கொண்ட ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.
தமிழில் கமல் ஹாசன் உடன் இணைந்து ரேகா நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் அவருக்கு கோலிவுட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் ரேகா - கமல் தற்கொலை காட்சியும், ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலும் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. அந்தளவுக்கு உண்மையான காதலர்களைப் போல இருவரும் நடித்திருப்பார்கள். மலையாளத்தில் ரேகா நடித்து வெளியான தஷரதம் திரைப்படம், அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர், 2002-ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தவிர, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேகா, தன்னுடன் இருந்தவர்களை பாடாய் படுத்தினார். இதனால் அவருடன் சமையல் செய்யவே கோமாளிகள் மிரண்டனர். இதை புரிந்துக் கொண்ட சேனல் தரப்பினர், ரேகாவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப டிக் செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
கம்பேக்னா இப்படி இருக்கணும்: சி.எஸ்.கே தெறி ஆட்டம்!
இதுவரை தான் சார்ந்திருந்ததால், முதன் முறையாக தனியாக வாழ கற்றுக் கொள்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதாக மேடையில் கூறினார் ரேகா. அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடாவடி என்று பெயரெடுத்த தான், பிக் பாஸ் வீட்டில் காமெடி பீஸ் என்ற பெயரை எடுக்கப்போவதாகவும் கூறினார். இதையடுத்து அவரின் மகள் அனுஷாவும், தோழி ஊர்வசியும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தவிர, மீண்டும் கமலும், ரேகாவும் ஒரே நிகழ்ச்சியில் அங்கம் வகிப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா ரேகா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”