தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் பல பாடலாசிரியர்களுக்கு, கவிஞர் கண்ணதாசன் தான் ’காட் ஃபாதர்’. அவரின் உரைநடை நீரோடை போன்று, தெளிவான நடை. அவரது கவிதைகள் பலரையும் கிறுகிறுக்க வைக்கும். அழகு தமிழில் சொல்ல வரும் விஷயத்தை கச்சிதமாக சொல்வதில் கைதேர்ந்தவர் கவியரசர் கண்ணதாசன். இன்று அவர் பிறந்த தினம். இந்தநாளில் அவரைப் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை நினைவுக் கூறுகிறோம்.
’அழகான கமல் சப்பாணியா மாறுனது, அவரோட அட்வான்ஸ்டு மைண்ட்’: இயக்குநர் பாரதிராஜா
கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இவரின் இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு ‘நாராயணன்’ என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.
சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..’ என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். ‘கிரகலட்மி’ பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான் கண்ணதாசனின் முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். அதன் பின்னர், ‘சண்டமாருதம்’, ‘திருமகள்’, ‘திரை ஒலி’, ‘தென்றல்’ உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.
கம்பர், பாரதியார் மீது பற்றுக் கொண்ட கண்ணதாசன், பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். ‘கண்ணதாசன்’ என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். அதோடு காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.
தொடர்ந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். ‘கன்னியின் காதலி’ படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.
‘பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’ உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.
‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’, ‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படமும் தயாரித்தார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட கண்ணதாசன், தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.
2001-க்குப் பிறகு பாகிஸ்தான் தூதரக பலத்தை பாதியாகக் குறைக்கிறது இந்தியா
கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநடை நூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, ‘வன வாசம்’ உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது. ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘குழந்தைக் காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.
ஆழமான, வாழ்வியல் கருத்துகளை பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”