Mookuthi Amman: சினிமா பிரியர்களுக்கு இந்த தீபாவளி ரொம்பவும் வித்தியாசமானது. காரணம் தீபாவளியன்று காலை குளித்து, புதுத்துணி உடுத்தி, ஸ்பெஷல் தீபாவளி சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அடுத்தபடியாக திரையரங்குகளை நோக்கி படையெடுப்பது தான் ஒவ்வொரு சினிமா ரசிகரின் தீபாவளி ப்ளான்.
ஆனால் இந்த வருடம் கொரோனா வந்து இதையெல்லாம் அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. 7 மாதம் கழித்து கடந்த 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தீபாவளி ஸ்பெஷலாக எந்தப் படமும் தியேட்டரில் வெளியாகவில்லை. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனை ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலாஜியின் எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கருவாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் இதன் படபிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. தற்போது ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் மூக்குத்தி அம்மன் படமும் தீபாவளி ஸ்பெஷலாக இரவு 12 மணிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதன் ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. “நான் நோன்புக் கஞ்சியை குடிப்பேன். புனித அப்பத்தை புசிப்பேன் ஆனால் ஒரு போதும் ஆடி மாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்த ட்ரைலரில், நீட் தேர்வு, மதத்தை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்ட சமகால பிரச்னைகளும் பேசப்பட்டிருந்தன.
வேறொரு இடத்தில், ”தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியவில்லை. அடுத்த 5 வருடத்தில் வாங்கிக் காட்டுவேன்” என சாமியார் ஒருவர் கூற, அதற்கு அம்மனாக வரும் நயன்தாரா ”அவன் என்ன செய்றான்னு பார்க்கலாம்” எனக் கூறும்படி காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.
”உங்க தலைமுடி ஏன் இந்த கலர்ல இருக்கு என பாலாஜி கேட்க, கண்ட தண்ணில அபிஷேகம் பண்ணா வேற எப்படி இருக்கும்” என நயன்தாரா கேட்பார். செய்தியாளராக பாலாஜி, அவரது அம்மாக ஊர்வசி, 3 தங்கைகள் என நடுத்தர குடும்பத்து குலதெய்வமாக மூக்குத்தி அம்மன் வருகிறார். படத்தில் நிகழ்கால அரசியல் வசனங்களும், காமெடி காட்சிகளும் தூக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது. தவிர, தீபாவளி ஸ்பெஷல் படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”