Sun TV Magarasi Serial Artist Praveena with baby cobra
தமிழ் மற்றும் மலையாள மொழி சீரியல்களில் பிரபலமான நடிகை பிரவீனா, 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவியின் தாயாகவும், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியின் தாயாகவும், 'சாமி 2' படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயாகவும் நடித்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரியமானவளே’ சீரியலில் நடித்து புகழ்பெற்ற அவர், தற்போது ‘மகராசி’ சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், பிரவீனா வீட்டுக்கு எதிர்பார்க்காத விருந்தாளி வந்துள்ளார். அது ஒரு குட்டி நாகம். இதனை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரவீனா. தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் கோழிகளின் கொட்டகைக்கு அருகில் ஒரு குட்டி பாம்பைக் கண்டதும், உடனடியாக பூஜாப்புரா பாம்பு பூங்காவைச் சேர்ந்த சாஜி என்ற ஊழியரை அழைத்திருக்கிறார் பிரவீனா. பின்னர் அங்கு வந்து பாம்பை பிடித்த சஜி, அதனை பிரவீனாவிடம் ஒப்படைத்தார். ஆரம்பத்தில், பாம்பைப் பிடிக்க பயந்த அவர், பின்னர் தன்னம்பிக்கையுடன் கைகளில் ஏந்தினார்.
வழக்கமாக, பாம்புகளைப் பார்க்கும்போது மக்கள் பீதியடைவார்கள் என்றும், அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்குமோ என்ற பயம் தான் காரணம் என்றும், வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் பிரவீனா. குட்டி பாம்புடன் இருக்கும் அவர் வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பிரவீனாவின் தைரியத்தையும், ஊர்வனவற்றை மீட்பதற்கான அவரது முயற்சிகளையும் நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”