பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என ரஜினிகாந்த் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளில் பல மொழிகளில் இனிமையான குரலில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மொழிகள் அனைத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
சுனைனா, அதுல்யா, ரம்யா… பிக்பாஸ் 4-ல் யாரெல்லாம்னு பாருங்க!
ஆனால் கடந்த 13-ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைப்பிலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டரில் விடீயோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ வைத்த மதிப்பிற்குரிய எஸ்.பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விபட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கீரம் குணம் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”