ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் நெகட்டிவ் ஷேடில் இருந்த பூர்ணா, தான் பிரபல வழக்கறிஞர் சகுந்தலா தேவியின் மகள் என்று தெரிந்ததும், முழுநேர வில்லத்தனங்களை நிகழ்த்தத் தொடங்கி விட்டாள். ப்ரியாவை கொல்லத் துணிந்து, அந்த வலையில் அவளின் அம்மா மாட்டிக் கொள்ள, அந்த வழக்கில் பூர்ணாவுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து ஜெயிலில் அடைத்தாள் சுதா.
ஆனால், தன்னால் ஏற்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அனைவரிடமும் இரக்கத்தைப் பெறுவதற்காக, ஜெயிலில் ஆளை வைத்து அடி வாங்கிக் கொண்டாள் பூர்ணா. பின்னர் அவர்கள் அடித்ததால், இனி தன்னால் நடக்க முடியாது என்றுக் கூறி, சக்கர நாற்காலியில் அமர்ந்தாள். தான் முன்பு போல் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறி, அதை மற்றவர்களையும் நம்ப வைத்தாள்.
இருப்பினும், அவள் டான்ஸ் அடிக் கொண்டிருந்த போது சுதா கண்ணில் மாட்டிக் கொண்டாள். சுதாவும் அதை அப்படியே வீடியோ எடுத்து வைத்து, அவளை தன் வழிக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அவள் நடக்கும் விஷயம் பூர்ணாவின் அப்பா, அம்மாவுக்கும் தெரிந்து விட்டது. அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பூர்ணா, தனது பழிவாங்கும் குணத்தை விடுவதாக தெரியவில்லை.
இதற்கிடையே கால் மரத்துப் போகும் மருந்தை வேறு வாங்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் அதை சாப்பிடுவேன் என சுதாவிடமும், சகுந்தலாவிடமும் சவால் விடுகிறாள். ”இந்த மருந்தை சாப்பிட்டால் 48 மணி நேரத்திற்கு கால் மரத்துப் போகும். அப்புறம் எந்த டாக்டர் டெஸ்ட் பண்ணாலும், நடக்க முடியாதுன்னு தான் சொல்வாங்க” என்கிறாள். அவர்களை பழிவாங்க வேண்டும் என்று, தன் உடம்பை வருத்திக் கொள்ளும் எப்போது திருந்துவாள்?