Thalapathy Vijay : கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் வளாகத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படபிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் வருமானத்துறை அதிகாரிகளால் விசாரணைக்காக உடனடியாக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 132-ன் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தங்களுடன் சேர்ந்து அவரது சென்னை இல்லத்தில் நடந்து வரும் சோதனை நடவடிக்கையில் ஒத்துழைக்க வேண்டும் என்று, மதிய உணவு இடைவேளையில் வருமானத்துறை அதிகாரிகள் கேரவானில் வைத்து 15 நிமிடங்கள் விஜய்க்கு விளக்கியுள்ளனர். பிறகு, வருமான வரி உதவி ஆணையர் (விசாரணை), அவர்களுடன் விஜய் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
”சமீபத்தில் வெளியான பிகில் படத்திற்காக, அவர் ஒரு பெரிய தொகையைப் பெற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது” என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றான ‘பிகில்’ படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்தது.
Advertisment
Advertisements
முன்னதாக, ஏஜிஎஸ் சினிமாஸ், திரைப்பட நிதியாளர் அன்பு செழியன், சென்னையில் விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுக்கள், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை விசாரித்தது. சில ஆவணங்கள் குறித்து விஜய்யின் மனைவி, தனக்கு தெரியாது எனக் கூறியதையடுத்து, அவற்றை விஜய்யிடமே விசாரிக்க நினைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
”கணக்கில் வராத 40 கோடி ரூபாய் சென்னையிலும், மதுரையில் 17 கோடி ரூபாயும் அன்பு செழியனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக” வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ”ஏஜிஎஸ்ஸில் நடந்த சோதனையின் போது, இது தொடர்பான சில ஆதாரங்களையும் விவரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம், ஆனால் சோதனைகள் முடிந்த பின்னரே அவற்றைப் பகிர முடியும்” என்று புலனாய்வு பிரிவின் மூத்த ஐ-டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேடல்கள் முடிந்ததும் விவரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
புலனாய்வாளர்கள், என்.எல்.சி வளாகத்திற்குள் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு கூகிள் மேப்பை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அங்கு உள்ளூர்வாசிகளுக்கான நுழைவாயிலை அடைந்தபோது, அவர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, பிரதான வாயிலுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டியும் அவர்களுக்கு, பிரதான வாயிலில் ஆயுதமேந்திய காவலர்கள், அனுமதி தர மறுத்துவிட்டனர்.
அனுமதி வழங்கும் அதிகாரியான சுரங்க மேலாளரை பாதுகாப்புப் பணியாளர்கள் அலெர்ட் செய்தனர். ஐ-டி அதிகாரிகள் பின்னர் தாங்கள் யாரைச் சந்திக்கப் போகிறோம் என்பதை கூறாமல் சுரங்கப் பகுதிக்கு அனுமதிக்கக் கோரி எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை வழங்கினர். வருமான வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறோம் என்பதை மட்டும் மேலோட்டமாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அனுமதி வழங்கப்பட்ட பின்னர், மதிய உணவுக்குப் பிறகு விஜய் ஓய்வெடுக்கும் இடத்திற்கு விசாரணையாளர்கள் சென்றனர். வாரண்டைக் காட்டி, கேரவானுக்குள் சுமார் 15 நிமிடங்கள் சென்னை செல்ல வேண்டிய அவசியத்தை அதிகாரிகள் விஜய்க்கு விளக்கினர். ”பின்னர் அவரும் அதை ஒப்புக் கொண்டார்” என அதிகாரிகள் தெரிவித்தனர். தனது காரிலேயே வரட்டுமா என விஜய் கேட்க, அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவித்து வருமான வரித்துறையினரின் வாகனத்திலேயே அழைத்து வரப்பட்டுள்ளார் விஜய்.
பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி என்.எல்.சியின் சுரங்கப் பகுதியில் 10 நாட்களுக்கு மாஸ்டரை படமாக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.