Pandian Stores on Vijay TV : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சீரியல் என்றால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். காரணம் மற்ற சீரியல்களைப் போல, இதில் கட்டாய வில்லன் / வில்லிகள் இல்லை. இயல்பான களத்தில், நாம் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதைப் போன்ற சில கோபக்காரர்களும், ஆணவக்காரர்களும் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றனர். வில்லத்தனம் இல்லாத சீரியலா? அப்படி என்றால் போரடிக்குமே என நினைக்க வேண்டாம்.
Advertisment
இதில் வில்லத்தனம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மூர்த்தி தனது தம்பிகள் ஜீவா, கதிர் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். மூர்த்தியின் மனைவி தனம், தனது கொழுந்தனார்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்கிறார். ஜீவா தான் காதலித்த மீனாவை திருமணம் செய்துக் கொள்ள, கதிருக்கோ தனக்குப் பிடிக்காத முல்லையை திருமணம் செய்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. தங்களுக்குள் இருக்கும் ஈகோ, நெகட்டிவ் எண்ணங்கள் தான் நமக்கு எதிரிகள் என உணர்வுப்பூர்வமாக புரிய வைக்க முயல்கிறார்கள்.
கதிரும் முல்லையும் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முற்படும் நேரத்தில், ”ஆரம்பத்தில் இந்த வீடும், இந்தத் திருமணமும் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவேயில்லை” என தன் குடும்பத்தினரிடம் முல்லை பேசிக் கொண்டிருந்ததை அரைகுறையாகக் கேட்ட கதிர், கட்டாயத்தின் பேரால் தான் முல்லை நம்முடன் சந்தோஷமாக இருப்பதைப் போன்று நடிக்கிறாளா எனத் தவறாக நினைத்துக் கொள்கிறான்.
என்ன ஏது என்பதை நேரடியாக கேட்டிருந்தாலோ, இந்த பிரச்னை முடிந்திருக்கும். ஆனால் அவனுக்குள் இருக்கும் ஈகோ அவனை தடுக்கிறது. இப்படியே நாட்கள் செல்ல, ”என்னை இவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை போல, பிறகு ஏன் இவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டுமென” எண்ணுகிறாள் முல்லை. ”நான் என் அம்மா வீட்டிற்கு போகிறேன். எனச் சொல்ல, இவளுக்கு இங்கிருக்க விருப்பமில்லை போல, நம்மாள் அவள் ஏன் கஷ்டப்பட வேண்டும்” என நினைத்த கதிர், “உன் இஷ்டம்” என பதிலளிக்கிறான்.
இருவருக்குள்ளும் அத்தனை அன்பு இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். இந்த பிரிவில் அவர்கள் தங்களது அன்பை உணர்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.