ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கினர். அதன்படி இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், மற்றும் எஸ். அப்துல் நாஸீர் மற்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த தீர்ப்பினை வழங்கியது.
Advertisment
Advertisements
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அது தவறிழைக்காது என கூற முடியாது. அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.
எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தானமாகத் தேவையில்லை. 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கிறோம். அதனை ஏற்கும் நிலையில் இருக்க விரும்பவில்லை.
அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை. பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியைச் சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்'' என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர்கள், 'உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், திருப்தி இல்லை. நாங்கள் எதிர்பார்த்தபடி தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.