Chicken Biryani recipes | Nattu Kozhi biryani in tamil: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
Advertisment
தீபாவளி பண்டிகையையொட்டி பலருக்கும் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், இந்த நாளில் நாம் சுவையான உணவுகளை நமது வீட்டிலே தயார் செய்து நம்முடைய உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி என்ன சமைக்கலாம் என்று நீங்கள் யோசித்தால், அனைவரும் விரும்பும், பெயர் சொன்னால் நா ஊறும் பிரியாணி வகைகளை செய்து அசத்தலாம். அதிலும் குறிப்பாக, நாட்டுக்கோழி பிரியாணி தயார் செய்து மகிழ்விக்கலாம்.
அந்த வகையில், இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
நாட்டுக்கோழி பிரியாணி தயார் செய்யத் தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - முக்கால் கிலோ சீரகச்சம்பா அரிசி - அரை கிலோ பெரிய வெங்காயம் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித் தழை - அரை கட்டு (2 கைப்பிடி) புதினா - கால் கட்டு (ஒரு கைப்பிடி) கெட்டித் தயிர் - கால் கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பால் - அரை டம்ளர் எலுமிச்சை - கால் மூடி ப்ரிஞ்சி இலை - 3 எண்ணெய் - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
பொடி அரைக்க:
பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 2 ஏலக்காய் - 1 அன்னாசிப்பூ - 1 ஜாதிக்காய் - சிறிய துண்டு (மிளகு அளவு)
டேஸ்டி நாட்டுக்கோழி பிரியாணி சிம்பிள் செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
பின்னர் குக்கரில் நாட்டுக்கோழித் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதற்கிடையில், தயிருடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிசறி தனியாக வைக்கவும்.
இதேபோல் பொடியாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை நன்கு பொடியாக அரைத்ததுக்கொள்ளவும்.
பின்னர், அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பொடித்த மசாலா போட்டு தாளிக்கவும். அதன்பின்னர், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இப்போது, தயிரில் கலந்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். நன்கு வதங்கியதும் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் பால் சேர்த்து, அரிசியின் அளவைவிட ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசியையும், முக்கால் பதம் வெந்த நாட்டுக்கோழித் துண்டுகளையும் சேர்க்கவும். உப்பு சரிபார்த்து மெதுவாக கிளறிவிட்டு மூடிவைத்து வேகவிடவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து, மீண்டும் கலந்துவிட்டு மிதமான தீயில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.
10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து வெந்ததை சரிபார்த்து ஒரு கரண்டி கொண்டு கிளறினால் சாதம் உடையாமல் இருக்கும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டி நாட்டுக்கோழி பிரியாணி சுடச் சுட தயாராக இருக்கும். அவற்றுடன் சாலட் மற்றும் ரைத்தா சேர்த்து பரிமாறி ருசித்து மகிழவும்.