வயிற்றுப் புழுக்கள், உடல் பருமன் மற்றும் பல பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார். இது குறித்த பல்வேறு தகவல்களை ஏ.எஸ்.எம் இன்ஃபோ என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்கிப்புழு, நாடாப்புழு, உருண்டைப்புழு, தட்டைப்புழு போன்ற பல்வேறு வகையான புழுக்கள் உள்ளன. அசுத்தமான உணவு, தண்ணீர் போன்றவற்றின் மூலம் புழு முட்டைகள் உடலுக்குள் நுழையலாம் என்று கூறப்படுகிறது.
வயிற்றுப் புழுக்களை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அதன்படி, குழந்தைகள் இரவில் பற்களை கடித்தல், வாய் ஓரம் எச்சில் வடிதல், தொப்புளைச் சுற்றி வலி, ஆசனவாயைச் சுற்றி அரிப்பு மற்றும் முகத்திலும், முதுகுப்பகுதியிலும் படைகள் தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.
இதற்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனில், இரத்த சோகை, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். இதனை தடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடல் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
இதற்காக, 5 கிராம் பூசணி விதைகளை வறுத்து பொடியாக அரைக்க வேண்டும். இத்துடன் 25 மில்லி தண்ணீர் மற்றும் 25 மில்லி தேங்காய் பால் சேர்க்கலாம். இந்த கலவையை தொடர்ந்து 7 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த அளவுகள் வயதுவந்தோருக்கானது மட்டுமே; குழந்தைகளுக்கு, பாதி அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். இதில் இருக்கும் தேங்காய்ப் பால் குடலில் வீக்கத்தைத் தடுக்கிறது.
இது தவிர மற்றொரு மருந்தும் இருக்கிறது. அதன்படி, வேப்பிலையில் காம்புகளை நீக்கி, வெந்நீர் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாவல் பழம் அளவிலும், 4-12 வயது குழந்தைகளுக்கு சுண்டக்காய் அளவிலும், 1-3 வயது குழந்தைகளுக்கு மிளகு அளவிலும் இந்த மருந்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது தயிர், பால் போன்ற செரிமானத்திற்கு கடினமான உணவுகளை தவிர்த்து விடலாம். சிறுபருப்பு கஞ்சி, பார்லி கஞ்சி, பழங்கள் போன்ற இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், சிகிச்சைக்கு முன் மற்றும் பின் மலம் பரிசோதனை மூலம் புழுக்கள் குறைந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள், இந்த வீட்டு வைத்திய முறைகளை முயற்சிக்கும் முன்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார்.