டாக்டர் செல்வா சண்முகம் அவர்களின் கூற்றுப்படி, உடல் பருமனை குறைப்பதற்கும், பசியை திறம்பட கட்டுப்படுத்துவதற்கும் இயற்கையான மற்றும் ஒருங்கிணைந்த வழிமுறைகளை பற்றி டாக்டர் விகடன் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்திருக்கும் இண்டர்வியூவில் கூறி இருக்கிறார். இது வெறும் உணவு கட்டுப்பாட்டை மட்டும் வலியுறுத்தாமல், உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உணவு முறைகளை மாற்றியமைப்பதன் அவசியத்தையும் விளக்குகிறது.
Advertisment
பசியின் தன்மை மற்றும் உணவு கட்டுப்பாடு: பசியின் அளவு தனிநபரின் உடல் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் செரிமான சக்தியைப் பொறுத்து மாறுபடும் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். "அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நோய்க்கு வழிவகுக்கும்" என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
உணவின் அளவு மட்டுமல்லாது, உண்ணும் நேரமும், புவியியல் மற்றும் காலநிலை காரணிகளும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, குளிர் காலம், மழை காலம், வெயில் காலம் போன்ற நிலைப் பொழுதையும், மலைப் பகுதி, கடற்கரைப் பகுதி, வயல் வெளிகள் போன்ற நிலங்களையும் பொறுத்து உணவின் தன்மை மாற வேண்டும் என்கிறார்.
சத்தான உணவுகள்: புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளான வேகவைத்த வேர்க்கடலை, கருப்பு சுண்டல் போன்ற பயறு வகைகள், அத்துடன் பசு நெய், மோர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்வது குடல் பகுதியில் உள்ள நாளமில்லா சுரப்பு மண்டல செல்களை சீர்படுத்தி, அதிகப்படியான பசியைக் குறைக்கும். ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு இந்த சத்தான பயறு வகைகளையும், மோரையும் உட்கொள்வது பசியின் ஆர்வத்தைக் குறைக்கும் என்கிறார்.
Advertisment
Advertisements
உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் சீரகத் தண்ணீர், துளசி தண்ணீர், வெள்ளரிப் பிஞ்சு தண்ணீர் (எலுமிச்சை சாறுடன்), அல்லது எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு கலந்த தண்ணீர் போன்ற மூலிகை பானங்களை அருந்துவது, திருப்தி உணர்வை ஏற்படுத்தி, உணவின் அளவைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: கீரை வகைகள், முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய வெந்தயம் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது பசி ஆர்வத்தைக் கணிசமாகக் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மூச்சுப் பயிற்சி: உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) மேற்கொள்வது, உணவு கட்டுப்பாட்டை எளிதில் ஏற்கவும், அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் குறைக்கவும் உதவும்.
முருங்கை விதை, ஆளி விதை, எள் விதை, சுரை விதை, பூசணி விதை போன்றவற்றை நெய்யில் வறுத்து மிளகுத்தூள் சேர்த்து பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிடலாம். மோர் குடிப்பது பசி ஆர்வத்தைக் குறைக்கும்.
மேலும், இஞ்சி சாறு அல்லது நெய்யில் வதக்கிய இஞ்சியுடன் வெல்லம் சேர்த்து அரைத்த இஞ்சி லேகியத்தை ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி வரை உட்கொள்வது பசி ஆர்வத்தைக் குறைக்க உதவும் என டாக்டர் செல்வா சண்முகம் பரிந்துரைக்கிறார்.
இந்த வழிமுறைகள் அனைத்தும் வெறும் உடல் எடையைக் குறைப்பதற்கான தற்காலிகத் தீர்வுகள் அல்லாமல், நீண்டகால ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என டாக்டர் செல்வா சண்முகம் வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.