நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படும் உணவுகளாக இட்லி மற்றும் தோசை உள்ளன. இட்லி மீந்து போனால் “சூரியவம்சம்” படத்தில் வருவதுபோல் இட்லி உப்மா செய்து அசத்தி விடலாம். ஆனால் தோசை மீந்து போய் விட்டால் என்ன செய்வது?. அப்படி உங்கள் வீட்டிலும் தோசை மீந்து விட்டால் இந்த சிம்பிள் மற்றும் டேஸ்டி ரெசிபியை செய்து அசத்துங்கள்.
சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் இந்த அற்புத ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு 10 நிமிடம் தான் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

மீந்து போன தோசையில் டேஸ்டி ரெசிபி: தேவையான பொருட்கள்:-
கல் தோசை – 4
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தாளிக்க…
கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்துக் கொள்ளவும்.
பிறகு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
அதன்பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், முன்னர் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
நாம் சேர்த்துள்ள தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த மீந்து போன தோசையில் செய்த டேஸ்டி ரெசிபியானா தோசை உப்புமா தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து சுவைத்து மகிழலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil