/indian-express-tamil/media/media_files/2025/09/21/karuppu-kavuni-2025-09-21-18-26-51.jpg)
கருப்பு கவுனி அரிசி, ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே உட்கொண்ட ஒரு மதிப்புமிக்க உணவுப் பொருளாகும். இன்று, இதன் ஆரோக்கிய நன்மைகள் பலருக்கும் தெரிய வர, எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது. இந்த அரிசியை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல்வேறு உடல்நலப் பலன்களைப் பெறலாம். குறிப்பாக, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும், செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்தக் கஞ்சியை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பராமரிக்கலாம். இதனை எப்படி செய்யலாம் என்று டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி - 250 கிராம் (ஒரு கப்)
தண்ணீர் - 5 கப் (அரிசி ஊறவைத்த தண்ணீர் 3 கப், சாதாரண தண்ணீர் 2 கப்)
தூள் உப்பு - கால் டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
தேங்காய் பால் (கஞ்சி உடன் சேர்த்துக்கொள்ள) - அரை கப்
நாட்டு சர்க்கரை (விரும்பினால்) - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் (விரும்பினால்)
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை ஒருமுறை நன்கு அலசி, குறைந்தது 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். இந்தத் தண்ணீரில் நிறைய சத்துக்கள் இருப்பதால், அதை வீணாக்க வேண்டாம். ஊறவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் பாதி பாதியாக சேர்த்து, பல்ஸ் மோடில் ரவை பதத்திற்கு, அதாவது நொறுநொறுப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய குக்கரில் அரைத்து வைத்த அரிசி மாவை சேர்த்து, முதலில் ஊறவைத்த 3 கப் தண்ணீரையும், பின்னர் 2 கப் சாதாரண தண்ணீரையும் சேர்க்கவும். மொத்தம் ஒரு கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் தேவைப்படும். இதனுடன் கால் டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
குக்கரை மூடி, நான்கு விசில் வரும் வரை சமைக்கவும். கேஸ் தானாக ரிலீஸ் ஆன பிறகு, குக்கரைத் திறக்கவும். கஞ்சி கெட்டியாக இருக்கும். அடியில் படிந்திருக்கும் மாவை நன்கு உடைத்துவிட்டு, தண்ணீரிலேயே கலந்து விடவும். இப்போது கஞ்சி போல ரெடியாகி இருக்கும். சூடான கஞ்சியில் 2 கரண்டி எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, அரை கப் திக்கான தேங்காய் பால் ஊற்றி நன்கு கலந்து சாப்பிடலாம்.
தேங்காய் பால் சேர்த்த கஞ்சியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சாப்பிடலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கஞ்சியில் தயிர் அல்லது மோர் சேர்த்து, கூழ் போல கலந்து குடிக்கலாம். கஞ்சியை ஆறவிட்டால் கெட்டியாகி களி போல ஆகிவிடும். இதனை உருண்டைகளாக எடுத்து, விரும்பிய குழம்புடன் சேர்த்து சாப்பிடலாம். இந்தக் கஞ்சியை உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தேவையற்ற கழிவுகளும் வெளியேறும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.