மூக்கிரட்டை கீரையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால், இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மூக்கிரட்டைக் கீரை பார்ப்பதற்கு சிறிய புல் போன்று எளிதாக காட்சியளிக்கும்.
மூக்கிரட்டை கீரை சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் குறைகிறது. சிறுநீரக கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.
மூக்கிரட்டை கீரையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கம், குறிப்பாக மூட்டு வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. மூக்கிரட்டை கீரை இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் தோல் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக அமையும். மூக்கிரட்டை கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் தொற்று நோய்கள் மற்றும் பிற பாதிப்புகள் வராமல் பாதுகாக்கலாம்.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மூக்கிரட்டைக் கீரையில் இருந்து எவ்வாறு சூப் தயாரித்துக் குடிக்கலாம் என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டைக் கீரை,
மிளகு,
சீரகம் மற்றும்
தண்ணீர்
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவிற்கு மூக்கிரட்டைக் கீரையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, மத்து கொண்டு நன்றாக தட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் அதில் இருந்து சாறு வெளியேறும்.
இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் மற்றும் மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். இது நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதன் பின்னர், இதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி குடிக்க வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இதனை குடிக்கும் போது கூடுதல் பலன் அளிக்கும்.