இந்தியாவில் சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய வாசனைப் பொருள் பெருங்காயம். இந்த பெருங்காயம் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பெருங்காயம் இயற்கையாகவே செரிமானத்தை சீராக்கும் தன்மை கொண்டது. இது வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. பெருங்காயம் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவும்.
பெருங்காயம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும், இது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நிலைமைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். பெருங்காயம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், உடல் வலிகளைக் குறைக்க உதவுகிறது. தசை பிடிப்புகளை இளக்கும் தன்மை பெருங்காயத்துக்கு இருப்பதால் வயிற்று வலிக்கு சிறப்பான தீர்வளிக்கும்.
குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வரலாற்று ரீதியாக, தொற்று பரவல் இருந்த காலங்களில் பெருங்காயத்தின் பயன்பாடு அதிகம் இருந்திருக்கிறது. பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ்களை அழிக்கவும் பெருங்காயம் பயன்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதால், இதயத்தையும் பாதுகாக்கும்.
இப்படி பல நன்மைகளை உள்ளடக்கியுள்ள பெருங்காயத்தில் கலப்படம் அதிகமாக வருகிறது. அனைத்து உணவுப்பொருட்களிலும் கலப்படம் என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது என்றாலும் கூட, அதை கண்டுபிடிப்பது குறித்த வழிமுறைகளும் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கலப்படமான பெருங்காயத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சுத்தமான பெருங்காயம், நல்ல மணமாகவும் உணவில் சேர்த்தவுடன் கரையக் கூடியதாக இருக்கும். ஆனால் கலப்படமான பெருங்காயம், மணமும் குறைவாகவே இருக்கும். உணவின் சுவையையே கெடுக்கும். இந்த கலப்படமான பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதன் மூலம் அலர்ஜி, புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெருங்காய பொடியை எடுத்து, விரல்களில் நடுவே தேய்த்து பார்க்க வேண்டும். அப்போது, அது கரகரப்பாக இருந்தால் அது கலப்படமான பெருங்காயம் என்பது உறுதியாகிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயம் எளிதில் கரையக்கூடியது.
சுத்தமான பெருங்காயத்தில் நல்ல நறுமணம் இருக்கும். மணம் குறைந்து இருந்தால் அது கலப்படம். சிறிது எடுத்து சூடான எண்ணையில் போட அதன் மணம் உடனே பரவும். எண்ணெயில் போட்டாலும் மணம் வரவில்லை என்றால் அது கலப்படமானது. சுத்தமான பெருங்காயத்தின் நிறம் மஞ்சளில் இருந்து லேசான ப்ரௌன் நிறத்தில் இருக்கும். கலக்கப்பட்டு இருந்தால் அந்த பெருங்காயம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதை வைத்து கலப்பட பெருங்காயத்தை கண்டுபிடித்துவிடலாம்.