/indian-express-tamil/media/media_files/2025/03/24/WV9suBselpKiUBQbT0TY.jpg)
உடலில், இரைப்பை அல்லது முன்சிறுகுடலின் உட்புறச் சுவரில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்று சொல்வார்கள். இரைப்பையில் ஏற்படும் புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், முன்சிறுகுடலில் ஏற்படும் புண்களை டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கும் இந்த அல்சர் பிரச்னை, பாக்டீரியா வயிற்றின் உட்புறப் படலத்தை பாதித்து புண்களை உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. வயிற்றில் உணவு செரிமானத்திற்காக சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் அளவு அதிகமாகும்போது வயிற்றுச் சுவரை அரித்து புண்களை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது, துரித உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவையும் வயிற்றுப் புண்களை உண்டாக்கலாம்.
சிலருக்கு பரம்பரையாக வயிற்றுப் புண்கள் வர வாய்ப்புள்ளது. வயிற்றில் கடுமையான வலி, இரவில் வயிற்றில் எரிச்சல் உணர்வு, குமட்டல் மற்றும் வாந்தி, நெஞ்செரிச்சல், இரத்த வாந்தி அல்லது கருமையான மலம், பசியின்மை, வயிறு உப்பசம் போன்ற அறிகுறிகள் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
காலை 7-9 மணிக்குள் காலை உணவையும், மதியம் 12-2 மணிக்குள் மதிய உணவையும், இரவு 7-8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். அதேபோல் சாப்பிடும்போது அரை வயிறு சாப்பிட்டுவிட்டு கால் வயிறு தண்ணீர் குடித்துவிட்டு கால் வயிறை காலியாக வைத்துக்கொள்ள வேண்டும். குடலில் இருக்கும் புண்களை ஆற்றுவதற்கு தேன் ஒரு முக்கிய நிவாரணியாக உள்ளது. அதேபோல் வெண்பூசனி ஜூஸ் அல்சருக்கு நிவாரணம் தரும். பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.
பார்லியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, கஞ்சி வைத்து பால் தேன் சேர்த்து, அதில் இந்த பார்லி பொடியை சேர்த்து குடித்தால், வயிறு, அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இவற்றில் எதுவும் இல்லை என்றால், காலை எழுந்தவுடன் அரைலிட்டர் தண்ணீர் குடித்துவிட வேண்டும் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.