ஒவ்வொரு கீரை வகையிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் அரைக்கீரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுவத்தில் தொடங்கி உடல் பலத்தை அதிகப்படுத்துவது வரை ஏராளமான நன்மைகள் இதில் இருக்கின்றன. அதன்படி, சுவையான அரைக்கீரை கடையல் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு,
சிறுபருப்பு,
தக்காளி,
பச்சை மிளகாய்,
பூண்டு,
மஞ்சள் தூள்,
எண்ணெய்,
கடுகு,
சோம்பு,
சீரகம்,
சின்ன வெங்காயம்,
காய்ந்த மிளகாய்,
பெருங்காயத்தூள்,
அரைக்கீரை,
குழம்பு மிளகாய்த்தூள்,
உப்பு.
செய்முறை:
ஒரு கப் துவரம் பருப்பையும், அரை கப் சிறு பருப்பையும் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு தக்காளி, 2 பச்சை மிளகாய், 4 பூண்டு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் கடுகு, சீரகம், சோம்பு, ஆறு சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், நான்கு பூண்டு மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதன் பின்னர், கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரைக்கீரையை இதில் சேர்த்து வதக்கலாம். இந்த கீரை சுருங்கும் வரை வதக்க வேண்டும். அதன் பின்னர், வேக வைத்த பருப்பை கடைந்து கீரையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் தேவையான அளவு தண்ணீர், ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இப்படி செய்தால் சுவையான அரைக்கீரைக் கூட்டு தயாராகி விடும்.