பல நோய்களுக்கு அருமருந்து... டாக்டர் ஷர்மிகா சொன்ன இந்தக் காய்; இப்படி உணவில் சேருங்க!
பல நோய்களை தீர்க்கும் வகையில் சுண்டைக்காய் செயலாற்றுவதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதன்படி, சுண்டைக்காயில் எவ்வாறு தொக்கு செய்யலாம் என்று இதில் பார்க்கலாம்.
பல நோய்களை தீர்க்கும் வகையில் சுண்டைக்காய் செயலாற்றுவதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதன்படி, சுண்டைக்காயில் எவ்வாறு தொக்கு செய்யலாம் என்று இதில் பார்க்கலாம்.
பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் சுண்டைக்காயில் இருக்கிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதில் கால்சியம், இரும்புச் சத்து, புரதம், அன்டி ஆக்சிடெண்ட்ஸ் போன்ற ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அந்த வகையில் சுவையான சுண்டைக்காய் தொக்கு எவ்வாறு செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தொக்கு வைப்பதற்கு தேவையான அளவு சுண்டைக்காய்களை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், இந்த சுண்டைக்காய்களை உப்பு கலந்த தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு மல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், கடுகு, மூன்று காய்ந்த மிளகாய்கள், கறிவேப்பிலை, சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பசை பக்குவத்திற்கு அரைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் சிறிது வெந்தயம், சின்ன 10 வெங்காயம், 6 - 8 பூண்டு, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது ஊற வைத்த சுண்டைக்காய்களையும் இதில் சேர்த்து வதக்கலாம். இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, புளி கரைசல் மற்றும் அரைத்து வைத்த மசாலா ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான சுண்டைக்காய் தொக்கு தயாராகி விடும்.