/indian-express-tamil/media/media_files/2025/05/07/D7swp3IC7rRcSKOMkHqS.jpg)
சளி தொல்லையை குணப்படுத்தும் ஆற்றல் தூதுவளை கீரையில் இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதனையும் கடந்த பல்வேறு மருத்துவ குணங்கள் தூதுவளையில் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டு இருமல் பிரச்சனை இருந்தால், தூதுவளையை மருந்தாக கொடுக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். மேலும், உடலில் வலிமையை கூட்டி ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றலும் தூதுவளை கீரையில் இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை கீரையில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் தயாரித்து சாப்பிடலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்,
உளுத்தம் பருப்பு,
கடலை பருப்பு,
இஞ்சி,
பூண்டு,
வத்தல்,
சின்ன வெங்காயம்,
தூதுவளை கீரை,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள்,
தேங்காய்,
புளி மற்றும்
கடுகு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு, மூன்று வத்தல் ஆகியவை சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும்.
இதன் பின்னர், 10 சின்ன வெங்காயம், ஒரு கப் தூதுவளை கீரை, கால் கப் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக, தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள், உப்பு, அரை கப் துருவிய தேங்காய் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.
இறுதியாக சிறிதளவு புளி சேர்த்து, இவை ஆறியதும் லேசாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான தூதுவளை துவையல் தயாராகி விடும். கடைசியாக, தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதில் ஊற்றி பரிமாறலாம்.
நன்றி - DD cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.