4 months old baby, 97 years old man recovered from coronavirus : கொரோனா வைரஸ் நோய்க்கு எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. வயது, மொழி, இனம், நாடு என்ற பேதமும் இன்றி அனைவரையும் தாக்கி மனித இனத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வேலையிழப்பு, தொழிலில் நட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் அதிக மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதையும் கூட சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் கொரோனா நோய் தொற்று வந்தால் மரணித்துவிடுவோம் என்ற அச்சம் தான் அறவே கூடாது. ஏன் என்றால் அதற்கு உதாரணமாக இன்று இவர்கள் இருவரும் திகழ்கின்றார்கள். கொரோனாவிற்கு ஏற்பட்ட மரணத்தையும், உயிர் பிழைத்து வீடு திரும்பியவர்களின் விகிதத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். கொரோனாவை வெல்வது மிகவும் எளிது என்று உங்களுக்கு புரியும்.
மேலும் படிக்க : கொரோனாவுக்கு முத்த மருத்துவம்… பரிதாபமாக உயிரைவிட்ட சாமியார் !
கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. 97 வயதான இவர், கொரோனா அறிகுறிகளுடன் மே 30ம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஹைப்பர் டென்சன் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கூட, அவர் கொரோனாவிற்கு எதிரான போரில் நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார். 14 நாட்கள் கடுமையான சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று கொரோனாவில் இருந்து பூரண குணம் பெற்றார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் காட்சி நம்பிக்கையை தருகிறது.
மரணத்தை வென்ற 4 மாத குழந்தை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் லட்சுமி என்பவருக்கு மே மாதம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருடைய 4 மாத குழந்தைக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. மே மாதம் 25ம் தேதி அன்று அக்குழந்தை விசாகப்பட்டினத்தில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 18 நாட்களுக்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் புதிதாக 14 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக அந்நகரில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 252 ஆகும். ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil