ஜெய்ப்பூரில் இந்த மாத தொடக்கத்தில், 69 வயதான இத்தாலிய சுற்றுப் பயணிக்கும், அவரின் 70 வயது மனைவிக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படதை அடுத்து, இரண்டாவது வரிசை எச்.ஐ.வி மருந்து (லோபினாவிர்/ரிடோனாவிர் காம்பிநேஷன்) கொடுக்கப்பட்டது.
Advertisment
இதில் முக்கிய திருப்பமாக, அந்த இத்தாலிய தம்பதிகளுக்கு தற்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவாக வந்துள்ளது.
"இரண்டு முறை அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது, இரண்டிலுமே, நெகட்டிவ் தான். அதாவது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை" என்று ராஜஸ்தான் சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.
மேலும்,"பிப்ரவரி 28 அன்று துபாயில் இருந்து திரும்பி வந்த 85 வயது முதியவர்க்கு, மார்ச் 11ம் நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அந்த முதியவருக்கும் கொரோனா வைரஸ் நெகட்டிவாக உள்ளது" என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், இந்தியாவில் முதல் முறையாக, இரண்டு இத்தாலிய நோயாளிகளுக்கு லோபினாவிர்/ ரிடோனாவிர் காம்பினேஷனை பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இருவரின் மருத்துவ நிலைமைகளும் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு சென்றது. வயதானவர்களுக்கு பொதுவாக இருக்கும் இறப்பு அபாயங்களை மனதில் வைத்துக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோயாளிகளின் சம்மதத்தைப் பெறுவது உட்பட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் கூறினர்.
சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு லோபினாவிர்/ரிடோனாவிர் காம்பிநேஷனை பயன்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் பெற்றது. வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறன் குறித்து சீனா- வும் 199-மக்களிடம் சோதனைகளை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் மருத்துவ செயல்முறைக்கான சான்றாக, ராஜஸ்தானில் இருந்து வரும் முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள முடியாதென்று மூத்த ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். "சீனாவில் அதிகமான மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட சோதனையின் முடிவுகளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் " என்று தொற்றுநோயியல் துறை டாக்டர் ஆர்.ஆர் கங்ககேதர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்தவமனைகளில் இவர்கள் எவருக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் இணை நோயுற்ற தன்மை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்) உள்ள 2 மூத்த குடிமக்கள் உட்பட 3 கொரோனா நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.அவர்களின் சோதனை அறிக்கைகள் தற்போது நெகட்டிவாக உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பாராட்டத்தக்க மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக எஸ்.எம்.எஸ் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ”என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் ட்வீட் செய்துள்ளார்.
இதன் மூலம், ராஜஸ்தானில் தற்போது ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.