பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா டிசம்பர் மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்தார். அப்போது, அவசரகாலக் கதவைத் திறந்ததாகக் கூறப்பட்டது.
இது குறித்து, தற்போது விளக்கம் அளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தச் சம்பவம் “தவறாக” நடந்ததாகவும், பயணி “மன்னிப்புக் கேட்டதாகவும்” விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து சிந்தியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "உண்மைகளைப் பார்ப்பது முக்கியம். விமானம் தரையிறங்கியபோது தவறுதலாக அவரால் கதவு திறக்கப்பட்டது. அனைத்து சோதனைகளுக்குப் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. அவர் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டார்” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, சூர்யா தானேமுன்வந்து, விமானி மற்றும் பணியாளர்களிடம் அதை தெரிவித்ததாக சிந்தியா கூறினார். “டிஜிசிஏ விசாரித்தது போல் முழு நெறிமுறை பின்பற்றப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கும் பிறகே விமானம் புறப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 10 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து சில ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இண்டிகோ செவ்வாய்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. பெங்களூரு தெற்கு எம்.பி சூர்யாவின் பெயரைப் பற்றிய செய்திகள் இருந்தாலும், இண்டிகோ தனது அறிக்கையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
அதில், டிசம்பர் 10, 2022 அன்று சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு 6E 7339 விமானத்தில் பயணித்த ஒரு பயணி, போர்டிங் செயல்பாட்டின் போது தற்செயலாக அவசரகால வழியைத் திறந்தார்.
இந்த செயலுக்கு பயணி உடனடியாக மன்னிப்பு கேட்டார்.வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சம்பவம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, விமானம் கட்டாய சோதனைகளுக்கு உட்பட்டது, இது விமானம் புறப்படுவதில் தாமதத்திற்கு வழிவகுத்தது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவை கடுமையாக சாடியுள்ளனர்.
காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில், “பிஜேபி விஐபி பிராட்ஸ்.. விமான நிறுவனம் புகார் செய்ய எப்படி தைரியம்? பா.ஜ.க அதிகார கும்பலுக்கு இது வழக்கம். இதனால் பயணிகளின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதா? ஆஹா! பாஜகவின் விஐபிகள் குறித்து உங்களால் கேள்வி கேட்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
சூர்யா மற்றும் இண்டிகோ ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, பாஜக எம்பியின் பெயரைக் குறிப்பிடாமல், ட்வீட் செய்துள்ளார். அதில், “அரசியல் வாழ்க்கையில் பெரியளவில் சாதிக்க யாரோ ஒருவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. இது இப்படி நடக்காது. அரசியலில் வெற்றி என்பது பணிவு மற்றும் விடாமுயற்சியின் காரணியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/