ஞாயிற்றுக்கிழமை நடந்த பாலம் இடிந்து விழுந்து 135 பேர் இறந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.ஜாலா உள்ளூர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று, தொங்கு பாலத்தின் (ஜூல்டா புல்) கேபிள் “துருப்பிடித்து இருந்தது” என்றும் “கேபிள் பழுதுபார்க்கப்பட்டிருந்தால், இது சம்பவம் நடந்திருக்காது,” என்றும் தெரிவித்தார்.
சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஒருவரும், பாலத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ஓரேவா நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவருமான தீபக் பரேக், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி எம்.ஜே. கானிடம், “அப்படியொரு துரதிஷ்டவசமான சம்பவம் நடந்தது, கடவுளின் விருப்பம் (பகவான் நி இச்சா)” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: மோர்பி விபத்து; மோடி வருகைக்கு முன் புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனை; எதிர்க்கட்சிகள் விமர்சனம்
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் நால்வரை 10 நாள் காவலில் வைக்கக் கோரிய, டி.எஸ்.பி ஜாலா, நீதிமன்றத்தில் வாய்மொழி சமர்ப்பிப்புகளில், “அனுமதிக்கக்கூடிய திறனை நிர்ணயிக்காமல், அரசாங்க அனுமதியின்றி, அக்டோபர் 26 அன்று பாலம் திறக்கப்பட்டது. உயிர்காக்கும் கருவிகள் அல்லது உயிர்காக்கும் காவலர்கள் பயன்படுத்தப்படவில்லை… பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பின் ஒரு பகுதியாக, தளம் (டெக்) மட்டுமே மாற்றப்பட்டது. காந்திநகரில் இருந்து வந்த FSL (Forensic Science Laboratory) குழு அறிக்கையின்படி வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.” என்று கூறினார்.
“பாலம் கேபிள்களால் தாங்கியிருந்தது, மேலும் கேபிளில் எண்ணெய் அல்லது கிரீஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் கேபிள் துருப்பிடித்து இருந்தது. கேபிளை சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. என்ன வேலை, எப்படி செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. வாங்கப்பட்ட/பயன்படுத்தப்பட்ட பொருள், அதன் தரம் சரிபார்க்கப்பட்டதா, போன்றவை விசாரணை செய்யப்பட உள்ளது” என்று டி.எஸ்.பி ஜாலா கூறினார்.
அரசு வழக்கறிஞர் எச்.எஸ்.பஞ்சால் பின்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ஒப்பந்ததாரர்கள் “தகுதியான பொறியாளர்கள் அல்ல” என்றும் “அவர்களால் ஃபேப்ரிகேஷன் (கட்டுருவாக்கம்) வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன” என்றும் இதுவரை விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று கூறினார்.
“பாலத்தில் அலுமினியப் பலகைகள் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று பஞ்சால் கூறினார்.
சுரேந்திரநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.கே.ராவல், காவலில் வைக்கப்பட்ட நான்கு பேருக்காக ஆஜரானார். அவர்கள் மேலாளர்கள் பரேக் மற்றும் தினேஷ்பாய் மஹாசுக்ராய் டேவ், ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ்பாய் லால்ஜிபாய் பர்மர் மற்றும் தேவங்பாய் பிரகாஷ்பாய் பர்மர்.
பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பரேக்கிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று ராவல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த கட்டத்தில், பரேக் நீதிபதியிடம் சென்று, கிராஃபிக் வடிவமைப்பைக் கையாண்டதாகவும், நிறுவனத்தில் மீடியா மேலாளராக இருப்பதாகவும் கூறினார்.
“நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தார்கள், ஆனால் கடவுளின் விருப்பம் (பகவான் நி இச்சா) இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்தது” என்று பரேக் கூறினார்.
வெல்டிங், எலக்ட்ரிக் பொருத்துதல் போன்ற வேலைகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் கையாள்வதாகவும், அவர்கள் பெற்ற பொருட்களின் அடிப்படையில் அவர்கள் அதைச் செய்ததாகவும் ராவல் சமர்ப்பித்தார்.
கைது செய்யப்பட்ட டிக்கெட் விற்பனையாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் பங்கு “கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது” என்று வரையறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அதே வேளையில், “அவர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல” என்று கூறி அவர்களை மேலும் காவலில் வைக்க கோரவில்லை.
ஓரேவாவின் இரண்டு மேலாளர்கள் பாலத்தை பழுதுபார்ப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை கவனித்துக்கொள்வதாகவும், புதுப்பித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு தரப்பு கூறியபோது, இரு மேலாளர்களுக்கும் “பாலத்தின் தகுதியைக் கண்டறிதலில் எந்தப் பங்கும் இல்லை” என்று மேலாளர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதற்கிடையில், மோர்பி பார் அசோசியேஷன் செவ்வாயன்று “ஒருமனதாக” ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதன் உறுப்பினர் வழக்கறிஞர்கள் “சம்பவத்துடன் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட எவர்” சார்பாகவும் ஆஜராக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil