Budget 2019 : பிரதமராக மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபின் நாளை (5.7.19) முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சார்பில், நாளை காலை 11 மணிக்கு 2019-20ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இவருக்கு இது முதல் பட்ஜெட் என்பதாலும், ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வர்த்தகம், பாதுகாப்பு போன்ற துறைகளின் அமைச்சராக இருந்ததாலும் அவர் தாக்கல் செய்யப்போகும் நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ம் தேதி அப்போது தற்காலிக நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடந்ததால், புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான 4 மாத செலவுகளுக்கு ஒப்புதல் கேட்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறையில் என்னென்ன எதிர்பார்புகள்?
1. நடுத்தர மக்களுக்கு, வருமான வரியில் சலுகை; தொழில் துறையினருக்கான, தொழில் வரியில் சலுகை என, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
2. வருமான வரி வரம்பில் தளர்வு:
பொதுவாக பட்ஜெட் அறிவிப்புகள் என்று கூறும் போது தனிநபர் மற்றும் மாத சம்பள வாங்குபவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது வருமான வரி தளர்வாக இருக்கும். 2019 பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்திருந்து. ஆனால் வருமான வரி வரம்பு 2.5 லட்சம் ரூபாயாகத்தான் உள்ளது. அதை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
3.வருமான வரி சட்டப்பிரிவு 80சி:
தற்போது வருமான வரி சட்டப்பிரிவு 80சி கீழ் முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரையில் விலக்கு பெற முடியும். அதை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மாத சம்பள வாங்குபவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.வருமானவரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. தனிநபர் வருமான வரியை பொறுத்தவரையில் இடைக்கால பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகின. இந்தியாவில் மக்கள் சேமிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரியில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பட்ஜெட் 2019 : முன்னாள் ராணுவ வீரர்களை கதிகலங்க வைக்கும் ஓய்வூதிய மாற்றம்!
5. என்பிஎஸ் திட்டத்தில் இருந்து பணம் எடுத்தல் - தற்போது என்பிஎஸ் திட்டத்தில் இருந்து, 60 வயது ஆன பின் அல்லது ஓய்வு பெற்ற பின், எடுக்கும் பணத்தில் 40 சதவிகிதத்துக்கு மட்டுமே வரி விலக்கு கொடுக்கிறார்கள். இதை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதோடு 80CCD பிரிவின் கீழ் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு 50,000 ரூபாய் வரை விலக்கு அளித்திருக்கிறார்கள்..